பிரதமர் மோடி பேட் செய்தால் பந்து மைதானத்திற்கு வெளியே பறக்கும்..ட்வீட்டில் புகழ்ந்துதள்ளிய லலித்மோடி
டெல்லி: ஆளும் பாஜக மீது அத்தனை எதிர்க்கட்சிகளும் பாய்வதற்குக் காரணமான முன்னாள் ஐபிஎல் தலைவர் லலித் மோடி தற்போது பிரதமர் மோடியைப் பாராட்டி ட்வீட் செய்துள்ளார்.
லலித் மோடி பதிவு செய்துள்ள ட்வீட்டில் நமது பிரதமர் விஷயம் அறிந்த மனிதர். அவருக்கு எனது அறிவுரை தேவையில்லை. அவர் பேட் செய்தால் பந்தை மைதானத்துக்கு வெளியே அனுப்புவார்" என்று பதிவிட்டுள்ளார்.
சுஷ்மா ஸ்வராஜ்-லலித் மோடி-வசுந்தரா ராஜே விவகாரம் முற்றியுள்ளதையடுத்து, லலித் மோடிக்கு எதிராக பாஜக இண்டெர்போலிடம் ரெட் கார்னர் நோட்டீஸ் கோரும் என்று கூறியுள்ளதையடுத்து பிரதமரைப் பாராட்டி ட்வீட் செய்துள்ளதாக டெல்லி வட்டாரங்களில் கூறப்படுகிறது.
லலித் மோடி தொடர்ந்து தனது ட்விட்டர் பதிவுகளில் அரசியல் தலைவர்களை சந்தித்தது பற்றி கூறிவருகிறார்.
வெள்ளிக்கிழமையன்று மூத்த காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான கபில் சிபலிடம் 3 நாட்கள் சாட் செய்ததை வெளியிட்டிருந்தார்.
இதே நாளில் முன்னதாக பிரியங்கா, மற்றும் வதேராவை சந்தித்ததாக ட்வீட் செய்து பரப்பரப்பு ஏற்படுத்தினார். இதனையடுத்து காங்கிரஸ் கட்சி, சோட்டா மோடி, படா மோடிக்கு உதவி புரிவதாக சாடியது.
பாஜகவும் தன் பங்குக்கு, இந்த சந்திப்பு குறித்து சோனியா பதில் கூற வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தது.
'சோட்டா மோடி, படா மோடி' என்ற காங்கிரஸ் சாடலை அடுத்தே இன்று பிரதமர் மோடிக்கு தனது அறிவுறை தேவையில்லை என்றும் அவரே தனக்கு வரும் பந்துகளை மைதானத்துக்கு வெளியே அடிப்பார் என்றும் லலித் மோடி ட்வீட் செய்துள்ளார்.