ராமர் கோயில் விவகாரத்தால், இந்தியாவும் சிரியாவாக மாறும்.. யாரை எச்சரிக்கிறார் ஸ்ரீஸ்ரீ?
Recommended Video
டெல்லி: பாபர் மசூதி விவகாரம் சரி செய்யப்படவில்லை என்றால், இந்தியாவும் சிரியாவாக மாற வாய்ப்புள்ளது என்று வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீஸ்ரீரவி சங்கர் தெரிவித்துள்ளார்.
ஆங்கில தொலைக்காட்சி சேனல் ஒன்றுக்கு அவர் அளித்த சிறப்பு பேட்டியில் இவ்வாறு அவர் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிரியாவில் உள்நாட்டு போர் உச்சத்தில் உள்ளது. குழந்தைகள் கூட கொல்லப்பட்டுள்ளனர். இந்த நிலையில், ராமர் கோயில் விவகாரத்தை முன்வைத்து இந்தியாவும் சிரியா போல மாறிவிடும் சூழல் உள்ளதாக ரவிசங்கர் தெரிவித்துள்ளார்.
விட்டுத்தர கோரிக்கை
இஸ்லாமியர்கள் நல்லெண்ண அடிப்படையில், அயோத்தி விவகாரத்தில் விட்டுக்கொடுக்க முன்வர வேண்டும். ஏனெனில், இந்துக்களை போல, முஸ்லிம்களுக்கு அயோத்தி என்பது நம்பிக்கைக்குரிய ஒரு இடம் கிடையாது. விவகாரத்திற்கு உரிய இடத்தில் வழிபாடு நடத்த இஸ்லாமும் அனுமதிக்கவில்லை. கடவுள் ராமரை இனிமேல் இன்னொரு இடத்தில் மாற்றி பிறக்க வைக்கவும் நம்மால் முடியாது. இதையெல்லாம் கருத்தில் கொண்டு, இஸ்லாமியர்கள் தங்கள் முடிவை தெரிவிக்க வேண்டும் என்றார்.
குளிர்காய்கிறார்கள்
சர்ச்சைக்குரிய இடத்தில் மருத்துவமனை கட்டிவிடலாம் என்று சொல்லப்படும் யோசனைகளை புறம்தள்ளியுள்ளார் ரவிசங்கர். அயோத்தி விவகாரத்தில் நான் சமாதான பேச்சுவார்த்தைகள் நடத்தி வருவதை சிலர் எதிர்க்கிறார்கள். ஏனெனில் அவர்கள் சண்டைகளை வைத்து குளிர்காய நினைக்கிறார்கள். நீதிமன்றத்தால் முழுமையாக இந்த பிரச்சினையை தீர்க்க முடியாது என்றே நான் நினைக்கிறேன் என்று ரவிசங்கர் மேலும் தெரிவித்துள்ளார்.
நடவடிக்கை
அனைத்திந்திய முஸ்லிம் பெர்சனல் சட்ட வாரிய உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட சையது சல்மான் ஹுசைன் நட்வியை சமீபத்தில் ரவிசங்கர் சந்தித்து ஆலோசனை நடத்தியிருந்தார். மசூதியை வேறு இடத்திற்கு மாற்றிக்கொள்ள ஷரியத் சட்டம் அனுமதி வழங்கியுள்ளது என்று சையது சல்மான் ஹுசைன் நட்வி கருத்து தெரிவித்திருந்த நிலையில், அவர் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்ததாக கூறப்பட்டது.
மறுத்த ரவிசங்கர்
ஆனால், சையது சல்மான் ஹுசைன் நட்விக்கு, ரவிசங்கர் பணம் கொடுத்துதான், இவ்வாறு பேச வைத்ததாக ஒரு குற்றச்சாட்டு எழுந்திருந்தது. இந்த குற்றச்சாட்டுக்கு தனது நேர்காணலில் ரவிசங்கர் மறுப்பு தெரிவித்துள்ளார்.