இந்தியாவுடன் மோதினால் சீனாவுக்கு பேரிடிதான் கிடைக்கும்.. எப்படி தெரியுமா?
இந்தியாவுடன் மோதுவதற்கு முன்னர் சீனா தமக்கு ஏற்படப் போகும் பொருளாதார பேரிடிகளை யோசிக்க வேண்டும் என்கின்றனர் அரசியல் வல்லுநர்கள்.
டெல்லி: இந்தியாவுடன் போர் முனைப்பில் சீனா ராணுவமும் அந்நாட்டு ஊடகங்களும் வரிந்து கட்டுகின்றன. ஆனால் இந்தியாவுடனான யுத்தத்தில் இறங்கினால் பொருளாதார ரீதியாக சீனாவுக்கு பேரிடிதான் கிடைக்கும் என்கின்றனர் அரசியல் வல்லுநர்கள்.
சர்வதேச நாடுகளின் பார்வையில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி கிடுகிடுவென விஸ்வரூபமெடுத்து வருகிறது. 2025ம் ஆண்டில் இந்தியா பொருளாதார வளர்ச்சியில் உச்சமடையும் என எதிர்பார்க்கின்றன சர்வதேச நாடுகள்.
இருதரப்பு வர்த்தகம்
அதேபோல் இந்தியாவுடனான சீனாவின் பொருளாதார உறவும் கடந்த 10 ஆண்டுகளில் மிக அதிகமாக உயர்ந்துள்ளது. இருநாடுகளிடையே ஆண்டுக்கு 71பில்லியன் டாலர் அளவில் வர்த்தகம் நடைபெறுகிறது.
அடியோடு நாசமாகும்
இதில் 58.33 பில்லியன் டாலர் அளவுக்கு சீனாதான் இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்துள்ளது. நாம் 11.76 பில்லியன் டாலர் அளவுக்குதான் சீனாவுக்கு ஏற்றுமதி செய்திருக்கிறோம். யுத்தம் மூண்டால் சீனாவின் இந்த ஏற்றுமதி வர்த்தகம் அடியோடு நாசமாகிவிடும் என்பதால் ஒருமுறைக்கு இருமுறை அந்நாடு யோசிக்கும்.
தொழிற்பாதை
இதைவிட மிக முக்கியமானது சர்ச்சைக்குரிய சீனா-பாகிஸ்தான் எக்கனாமிக் காரிடார் எனப்படும் தொழிற்பாதைதான். உலகின் பிறபகுதியுடன் சீனா வர்த்தக உறவுகளை மேம்படுத்துவதற்கு பின்பற்றும் கொள்கைதான் "One Belt, One Road" (OBOR).
பாகிஸ்தானுக்குள்...
சீனாவில் தொடங்கி சர்ச்சைக்குரிய பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் வழியாக ஈரான் எல்லையையொட்டிய பாகிஸ்தானின் கவ்தார் துறைமுகம் வரை சாலை மார்க்கத்தை மேம்படுத்தும் பணியில் மும்முரமாக இறங்கி உள்ளது. இந்தியாவுடனான யுத்தம் மூளும் நிலையில் நிச்சயமாக இந்த திட்டம் மிகக் கடுமையாக பாதிக்கப்படும் பேராபத்து உள்ளது.
பேராபத்து
இத்திட்டத்துக்காக ஏற்கனவே 50 பில்லியன் டாலர்களை சீன நிறுவனங்கள் முதலீடு செய்திருக்கின்றன. ஆகையால் பொருளாதாரம் சார்ந்து சீனா சிந்தித்தால் இந்தியாவுடனான யுத்தத்துக்கு அது ஒன்றுக்கு இருமுறை சிந்திக்கவே வாய்ப்புள்ளது என்கின்றனர் அரசியல் வல்லுநர்கள்.