செட்டிலாகிவிட்டோம் என்று தேங்காமல் ரிஸ்க் எடுங்கள்: மாணவர்களுக்கு சுந்தர் பிச்சை டிப்ஸ்
டெல்லி: டெல்லி ஸ்ரீராம் வணிகவியல் கல்லூரியில், கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை இன்று, மாணவர்களோடு சந்திப்பு நிகழ்த்தினார்.
மாணவர்கள் கேட்ட கேள்விகளுக்கு சுந்தர் பிச்சை அளித்த பதில்: எனக்கு கிரிக்கெட்டும், கால்பந்தாட்டமும் பிடிக்கும். ஆனால் டி20 போட்டிகளைவிட ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளையே விரும்புகிறேன்.
கூகுள் சி.இ.ஓவாக பதவி வகிக்காவிட்டால் நான் சாப்ட்வேர் டெவலப் செய்யும் வேலையில்தான் இருந்திருப்பேன். உங்களை யார் உத்வேகப்படுத்துகிறார்களோ, அவர்களுடனேயே எப்போதும் கலந்திருங்கள் என்பதை மாணவர்களுக்கான அறிவுரையாக கூற விரும்புகிறேன்.
ஒரு செயலை செய்யும்போது ரொம்ப வசதியாக உணர்ந்தீர்களானால், நீங்கள் உங்களை தேக்கி வைத்துவிட்டீர்கள் என்று அர்த்தம். பாதுகாப்பற்ற நிலையிலேயே உங்கள் பணிச்சூழல் இருக்க வேண்டும். அப்போதுதான் முன்னேற முடியும்.
இந்தியாவில் இப்போது ரிஸ்க் எடுத்து தொழில் செய்யும் மனநிலை வந்துள்ளது. சிலிக்கான் வேலி தொழில்முனைவோருக்கும், இந்திய தொழில்முனைவோருக்கும் வித்தியாசம் எனக்கு தெரியவில்லை.
இந்தியாவில் டீக்கடைகளில் கூட தொழில்முனைவோரை பார்க்க முடியும். சாப்ட்வேர் துறையின் ரத்த நரம்பு, டெவலப்பர்கள்தான். அதிகப்படியான டெவலப்பர்களை கொண்டிருந்தால், அதிகப்படியான பிரச்சினைகளை சமாளிக்கலாம். நமது மாணவர்களுக்கு ரிஸ்க் எடுப்பதன் அவசியத்தை சொல்லி கொடுக்க வேண்டும்.
ஆண்ட்ராய்டு தயாரிப்பு ஒன்றுக்கு, இந்திய உணவுப்பொருள் பெயரை சூட்டலாமே என்று கோரிக்கை வைக்கப்படுகிறது. ஆன்லைனில் ஒரு வாக்கெடுப்பை நடத்தி உணவு பண்டத்தின் பெயரை வைத்துவிடலாம் (சிரிப்பு).
நான் 1995ல் முதல்முறையாக போன் வாங்கினேன். 2006ல்தான் ஸ்மார்ட் போன் வாங்கினேன். தற்போது வீட்டில் 20-30 ஸ்மார்ட் போன்கள் உள்ளன. கூகுளின் அனைத்து சேவைகளையும் இந்தியாவுக்கு கொண்டுவர வேண்டும் என்று விரும்புகிறோம். இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியை கிரிககெட் வர்ணனையாளர் ஹர்ஷா போக்லே தொகுத்து வழங்கினார்.