என் பேச்சைக் கேட்காவிட்டால் அனைத்தையும் இழக்க நேரிடும்.. குடும்பத்தினருக்கு சசிகலா எச்சரிக்கை!
தமிழக அரசியலில் சசிகலா குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஆளாளுக்கு தலைதூக்கி வரும் நிலையில் குடும்பத்தினருக்கு சசிகலா கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
Recommended Video
பெங்களூரு: தமிழக அரசியலில் சசிகலா குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஆளாளுக்கு தலைதூக்கி வரும் நிலையில் குடும்பத்தினருக்கு சசிகலா கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் இனியும் என் பேச்சை கேட்காவிட்டால் நீங்கள் பெற்றுள்ள அனைத்தையும் இழக்கநேரிடும் என எச்சரித்துள்ளார்.
ஆர்கே நகர் இடைத்தேர்தலில் தினகரன் வெற்றி பெற்றதற்கு பின்னர் தமிழக அரசியலில் சசிகலா குடும்பத்தினரின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. டிடிவி தினகரன், சசிகலாவின் கணவர் நடராஜன், சசிகலாவின் தம்பி திவாகரன், அவரது மகன் ஜெய் ஆனந்த் ஆகியோர் இதனை உறுதிப்படுத்தும் விதமாக நாள்தோறும் ஏதாவது பேசி செய்திகளில் இடம்பிடித்து வருகின்றனர்.
சசிகலா குடும்பத்தினரின் இந்த நடவடிக்கை தமிழக அரசியல் தலைவர்கள் மட்டுமின்றி அதிமுக தொண்டர்களிடையேயும் எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் சசிகலாவின் தம்பி திவாகரன் ஜெயலலிதா டிசம்பர் 4ஆம் தேதியே இறந்துவிட்டார் என்றும், அப்போது மத்திய அரசின் கழுகு ஒன்று மருத்துவமனையில் இருந்தது என்றும் அந்த கழுகு அவருக்கு வேண்டியவருக்கு முதல்வர் பதவியை வாங்கி செல்லலாம் என்று திட்டமிட்டிருந்தது என்றும் கூறினார்.
திவாகரனால் சூடான டெல்லி
திவாகரனின் இந்த பேச்சு தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மத்திய அரசின் கழுகு என திவாகரன் கூறியது குடியரசுத் துணை தலைவர் வெங்கையா நாயுடுவைதான் என உளவுத்துறை ரிப்போர்ட் அளிக்க, சூடாகியுள்ளதாம் மத்திய அரசு.
இளம் பாசறை தொடக்கம்
இந்நிலையில் திவாகரனின் மகன் ஜெய் ஆனந்த், ‘‘மாவீரன் சுபாஷ்சந்திரபோஸ் மக்கள் பணியகம்'' என்ற அமைப்பை பொங்கல் அன்று தொடங்கினார். அதிமுகவில் இயங்கி வரும் இளம் பாசறையினைப் போல அமைப்பை அவர் உருவாக்கியுள்ளார்.
யாரைக்கேட்டு ஆடுகிறார்கள்?
இவற்றையெல்லாம் தனது வழக்கறிஞர் மூலம் கேட்டறிந்த சசிகலா சிறையிலேயே ருத்ர தாண்டவம் ஆடியுள்ளார். யாரைக்கேட்டு இப்படி ஆடுகிறார்கள்? என்ன நடக்கிறது வெளியே என இளவரசியிடம் பொறிந்து தள்ளியுள்ளார் சசிகலா.
சசி எழுதிய கடிதம்
தனது கோபத்தை வெளிப்படுத்தும் விதமாக கணவர் நடராஜன, தம்பி, தம்பி மகன், தினகரன் என அனைத்து உறவுகளுக்கும் கடிதம் ஒன்றை எழுதி கொடுத்து அனுப்பி உள்ளாரம். அதில், கடுமையான வார்த்தைகளை சசிகலா பயன்படுத்தியதாக கூறப்படுகிறது.
உளவுத்துறை ரிப்போர்ட்
மேலும் ஏற்கனவே மக்கள் மத்தியில் எம்ஜிஆர் ஆரம்பித்த இயக்கத்தை ஒரு குடும்பம் கைப்பற்றி கட்டுக்குள் வைத்துக் கொண்டு இருப்பதாகவும், குடும்ப அரசியல் செய்துள்ள சசிகலா தமிழகம் முழுவதும் ஊருக்கு ஒருவரை தலைமையாக்கி கட்சியை கைப்பற்றியுள்ளதாகவும் மத்திய உளவுத்துறை ரிப்போர்ட் அனுப்பி இருக்கிறது.
உள்ளேயே கிடக்க வேண்டியதுதான்
இதன் பின்னணியில்தான் ரெய்டு உள்பட பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகிறோம். அவர்கள் சொல்வது போல ஆளாளுக்கு நீங்கள் இப்படி ராஜ்ஜியம் செய்து வந்தால் நான் காலம் முழுவதும் உள்ளேயே கிடக்க வேண்டியதுதான் என்று வேதனையை கொட்டியுள்ளார் சசிகலா.
நான் கட்டிய கோட்டையை..
இதற்காகவா நான் இத்தனை ஆண்டுகள் கஷ்டப்பட்டேன் என்றும் சசிகலா உருகியுள்ளாராம். மேலும் நான் கட்டிய கோட்டையை நீங்களே சரிப்பது வேதனையாக இருக்கிறது என்றும் தெரிவித்துள்ளாராம் சசிகலா.
யாரிடமும் எதையும் பேசக்கூடாது
இனிமேல் யாரும் தேவையில்லாமல் மீடியாவை சந்திக்க வேண்டாம். தேவையில்லாமல் யாரிடமும் எதையும் பேச வேண்டாம் என்றும் கட்டளையிட்டிருக்கிறாராம் சசிகலா.
அனைத்தையும் இழக்க நேரிடும்
இதற்கு மேலும் நீங்கள் நான் சொல்வதை கேட்கவில்லை என்றால் உங்களிடம் இருக்கும் அனைத்தையும் நீங்கள் இழக்க வேண்டிய நிலைமை ஏற்படும் என்றும் சசிகலா தனது கடிதத்தில் எச்சரித்துள்ளார். இந்தக் கடிதம் சசிகலாவின் கணவர் நடராஜன், தினகரன், திவாகரன் உள்பட சசிகலாவின் குடும்பத்தில் கோலோட்சும் முக்கிய நபர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.