தீவிரவாதத்தை நிறுத்துங்கள் இல்லையெனில் தண்ணீரை நிறுத்துவோம்.. பாகிஸ்தானுக்கு நிதின்கட்கரி வார்னிங்!
அமிர்தசரஸ்: தீவிரவாதிகளுக்கு ஆதரவளிப்பதை நிறுத்தாவிட்டால் பாகிஸ்தானுக்கு கொடுக்கப்படும் தண்ணீர் நிறுத்தப்படும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மத்திய அமைச்சர் நிதின்கட்கரி பாஜக வேட்பாளர் ஹர்தீப் பூரிக்கு ஆதரவாக பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் நேற்று வாக்கு சேகரித்தார். அப்போது மத்திய அரசு ஆறு அணைகளை கட்ட திட்டமிட்டுள்ளதாக அவர் கூறினார்.
பஞ்சாப், ஹரியானா, உத்தரகாண்ட், உத்தரபிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் நீடிக்கும் தண்ணீர் பிரச்சனையை தவிர்க்கும் வகையில் அணைகளை கட்ட மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக கூறினார்.
அவரே வரட்டும்.. மீண்டும் ஆக்டிவ் அரசியலுக்கு வரும் மன்மோகன் சிங்.. மாநில கட்சிகள் அசத்தல் யோசனை!
தண்ணீர் ஒப்பந்தம்
இந்தியா பாகிஸ்தான் இடையே 1960ஆம் ஆண்டு நீர் ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்தியாவில் இருந்து 3 நதிகள் மூலம் பாகிஸ்தானுக்கு தண்ணீர் செல்கிறது. இந்தியாவும் பாகிஸ்தானும் அமைதியான உறவுடனும் நட்புடனும் இருக்க வேண்டும் என்பதற்காகவே இந்த ஒப்பந்தம் போடப்பட்டது.
வேறு வழியில்லை
ஆனால் அது முற்றிலும் மறைந்து போய்விட்டது. பாகிஸ்தான் தொடர்ந்து தீவிரவாதிகளுக்கு ஆதரவு அளித்து வருகிறது. பாகிஸ்தான் தீவிரவாதத்தை நிறுத்தாவிட்டால், பாகிஸ்தானுக்கு செல்லும் நதிநீரை நிறுத்துவதை தவிர நமக்கு வேறு வழியே இல்லை. அதற்கான ஆரம்பகட்ட ஆய்வுப் பணிகளை இந்தியா துவங்கி உள்ளது.
நீண்ட நேரம் ஆகாது
பாகிஸ்தான் தனது தீவிரவாத முகத்தை மாற்றாவிட்டால் இந்தியா பாகிஸ்தானுக்கு நதி நீரை நிறுத்துவதற்கான கடுமையான முடிவை எடுக்க நீண்ட நேரம் ஆகாது.அந்த நதிகளின் நீர் அரியானா, பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களுக்கு செல்லும். இதனால் பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களில் விவசாயத்திற்கான தண்ணீர் பற்றாக்குறை தீர்க்கப்படும்.
காங். செய்யாத வேலை
பஞ்சாப்பிற்கும் அண்டை மாநிலமான ஹரியானவிற்கும் இடையேயான தண்ணீர் பிரச்சனை தீர்க்கப்படும். கடந்த 50 ஆண்டுகளில் காங்கிரஸ் செய்யாத அபிவிருத்தி வேலைகளை பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியின் போது செய்யப்பட்டுள்ளது.
பயண நேரம் குறையும்
அமிர்தசரஸ் உள்ளிட்ட 6 நகரங்களில் இரட்டை அடுக்கு ஏர் பஸ் சேவையை தொடங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. தொழில் மற்றும் வர்த்தக யூனியனை ஊக்குவிப்பதற்காக, டெல்லி-அமிர்தசரஸ்-கட்ரா எக்ஸ்பிரஸ்வே திட்டத்தை உருவாக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது, இது அமிர்தசரஸ்க்கும் டெல்லிக்கும் இடையில் நான்கு மணி நேர பயணத்தை குறைக்கும். இவ்வாறு மத்திய அமைச்சர் நிதின்கட்கரி தெரிவித்துள்ளார்.