ஏன் கண்ணீர் விட்டு ஐயப்பன் கோவிலில் சாமி கும்பிட்டார் கேரளா ஐஜி.. பரபரப்பு!
ஐயப்பனை கண்ணீருடன் மனமுருகி வேண்டினார் ஐஜி ஸ்ரீஜித்
சபரிமலை: டி-ஷர்ட், வேட்டி அணிந்து கண்களில் தாரை தாரையாக கண்ணீருடன் ஐயப்பன் முன்பு நின்று மனமுருகி வேண்டி ஐஜி ஸ்ரீஜித் புகைப்படம் வைரலாகி வருகிறது.
ஐஜி ஸ்ரீஜித்... கடந்த 3 தினங்களுக்கு முன்பு பரபரப்பாக பேசப்பட்டவர். சபரிமலை கோயில் விவகாரம் குறித்து சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு சொன்ன பிறகு ஆதரவும், எதிர்ப்பும் மாறி நாட்டில் எழுந்து வந்தது. குறிப்பாக தென் மாநிலங்களில் இந்த தீர்ப்புக்கு கடும் எதிர்ப்பும் கிளம்பியது. ஆனால் கடந்த 17-ம் தேதி சபரிமலை நடை திறக்கப்பட்ட பின்பு இது மேலும் தீவிரமடைந்தது.
மோதல் தேவையில்லை
ரெஹனா, கவிதா ஆகிய 2 பெண்கள் கோயிலுக்குள் நுழைய முற்பட்டபோது கலவரம் மேலும் சூடானது. அப்போது கண்டன முழக்கம் விண்ணை பிளந்தது. பெண்களின் வருகைக்கு எதிரான கருத்துகள் முழங்கியபடியே இருந்தது. பக்தர்களுடன் எங்களுக்கு மோதல் தேவையில்லை, தாங்கள் சட்டத்தினை பின்பற்றுகிறோம் என்று சொன்னார் ஐஜி ஸ்ரீஜித்.
பாதுகாப்பு கவசங்கள்
அப்போது அந்த பெண்களுக்கு காவலர்கள் பயன்படுத்தும் கவசங்களை அணிவித்து போலீஸ் பாதுகாப்புடன் தனது தலைமையில் பத்திரமாக அழைத்து வந்தவர்தான் ஐஜி ஸ்ரீஜித். இப்படி 2 பெண்களுக்கும் ஸ்ரீஜித் கவசத்தை மாட்டி கூட்டி செல்லலாமா என எதிர்க்கட்சிகள் கடைந்தெடுத்தன. இப்படி ஒரே நாளில் ஃபேமஸ் ஆனார் ஸ்ரீஜித்.
பக்தரோடு பக்தராக...
இந்நிலையில் இன்று விடிகாலை கோயில் நடை திறக்கப்பட்டது. பக்தர்கள் கூட்டம் முண்டியத்து சென்றது. அப்போது அந்த கூட்டத்தில் ஒருவராக நின்று கொண்டிருந்தது ஐஜி ஸ்ரீஜித்-துதான். விறைப்பான காக்கி சட்டை இப்போது இல்லை. டி-ஷர்ட் மற்றும் வேட்டி அணிந்திருந்தார். பதட்டமான செயலோ, அன்றைக்கு கலவரத்தில் காணப்பட்ட டென்ஷன் முகமோ எதுவும் இல்லை. பக்தி பழமாக பக்தர்களுடன் பக்தராக நின்று கொண்டிருந்தார்.
கண்களில் கண்ணீர்
கருவறை கதவு திறக்கப்பட்டது. அப்போது கையெடுத்து ஐயப்பனை வணங்கிய ஸ்ரீஜித் கண்களில் தாரை தாரையாக கண்ணீர் வழிந்தபடியே இருந்தது. மனமுருகி வேண்டினார். இந்த காட்சிதான் தற்போது இணையத்தில் வைரலாகி வந்து கொண்டிருக்கிறது.