நல்லவேளை செமி பைனலில் தோற்றீர்கள்.. இந்தாங்க ஆயிரம் ரூபாய்: டோணிக்கு போலீஸ் ஐஜி கிப்ட்
உலகக் கோப்பை அரையிறுதி ஆட்டத்தில் தோற்றதால் இந்திய மக்கள் கிரிக்கெட் மாயையில் இருந்து விடுபட்டு பணிகளில் கவனம் செலுத்த ஆரம்பித்து விட்டனர். இதற்கு நீங்கள்தான் காரணம் என்று உத்தரபிரதேச மாநில போலீஸ் ஐ.ஜி. ஒருவர் இந்திய அணியின் கேப்டன் டோணிக்கு ஆயிரம் ரூபாய்க்கு செக்குடன் நன்றி கடிதத்தையும் அனுப்பியுள்ளார்.
உலக கோப்பையில், அரையிறுதி வரை முன்னேறிய இந்திய அணி, ஆஸ்திரேலியாவிடம் தோற்று உலக கோப்பையை விட்டு வெளியேறியது. இந்திய அணியின் தோல்வியால், உலக கோப்பை இறுதி போட்டியை பார்க்க கூட இந்திய ரசிகர்கள் பலரும் ஆர்வம் காட்டவில்லை.
இந்நிலையில், உத்தரபிரேதேச மாநில போலீஸ் ஐ.ஜி அமிதாப் தாக்கூர், இவர் இந்திய அணி கேப்டன் டோணிக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளார்.
அதில், ‘‘வளர்ந்து வரும் ஒரு நாட்டில் கிரிக்கெட் போட்டியை காரணம் காட்டி பெரும்பாலான மக்கள் வீட்டில் முடங்க செய்திருக்கிறீர்கள். கிரிக்கெட் என்ற போர்வையில் இந்த நாட்டு மக்களை அவர்களது பணிகளில் ஈடுபடாமல் செய்து வந்துள்ளீர்கள். உலகக் கோப்பை போட்டியில் அரையிறுதியில் இந்தியா தோல்வி கண்டதால் ரசிகர்கள் கிரிக்கெட் மாயையில் இருந்து விடுபடவும் நீங்கள்தான் காரணம். இதற்காக உங்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்'' என்று கூறியுள்ளார்.
இந்திய அணி தோற்றதற்கு நன்றி தெரிவித்து, பாராட்டி, டோணியின் ராஞ்சி நகர வீட்டு முகவரிக்கு ரூ.1000த்துக்கான காசோலையையும் அனுப்பியுள்ளார் அவர்.
அரையிறுதிக்கு பிறகு பைனல் மட்டுமே எஞ்சியிருந்தது. பைனலும், ஞாயிற்றுக்கிழமைதான் நடந்தது. அப்படியிருந்தும், ஏன் இப்படி ஒரு கடிதத்தை அந்த ஐஜி எழுதினாரோ, அது அவருக்கே வெளிச்சம்.