இந்தியில் பெயர் எழுதினால் மட்டுமே டிப்ளமோ சான்றிதழ்... ஐஐஎம் சுற்றறிக்கையால் மாணவர்கள் அதிர்ச்சி!
திருவனந்தபுரம் : மாணவர்கள் தங்களின் பெயர்களை இந்தியில் எழுத வேண்டும் என்று கோழிக்கோடு ஐஐஎம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. மாணவர்கள் இந்தியில் குறிப்பிடும் பெயரே டிப்ளமோ சான்றிதழிலும் இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பாஜக ஆட்சியில் இந்தி திணிப்பு, சமஸ்கிருதத்திற்கு முக்கியத்துவம் என்பது நாடு முழுவதும் அரங்கேறிக் கொண்டு தான் இருக்கின்றன. இந்தி திணிப்பிற்கு எதிராக தமிழகம் தொடர்ந்து போராடி வருகிறது, மைல்கற்களில் இந்தி இடம்பெற்ற போதும் மீண்டும் ஒரு இந்தி எதிர்ப்பு போராட்டம் நடக்கும் என்று ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்தார்.
இந்நிலையில் கோழிக்கோட்டைச் சேர்ந்த ஐஐஎம் கல்வி நிறுவனம் மாணவர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. இந்த சுற்றறிக்கை மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஐஐஎம் மாணவர்களுக்கு சுற்றறிக்கை
சுற்றறிக்கையில் இடம்பெற்றுள்ள அம்சங்கள் என்னவென்றால் : மாணவர்கள் தங்களின் பெயர்களை இந்தியில் எழுத வேண்டும். பிப்ரவரி 27 முதல் மார்ச் 1 வரையிலான காலகட்டத்தில் மாணவர்கள் ஏ3 வகுப்பறையில் காலை 10.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை இந்த பயிற்சியை எடுத்துக் கொள்ளலாம்.
இந்தியில் பெயர் எழுத வேண்டும்
பிஜிடிஎம் சான்றிதழை பெற இந்தியில் பெயர் எழுதுவது கட்டாயம். ஏனெனில் சான்றிதழ்களில் மாணவர்கள் இந்தியில் குறிப்பிடும் பெயர் இடம்பெறும். ஒருவேளை உங்களால் எழுத முடியாவிட்டால், நண்பர்களின் உதவியோடு எழுதலாம்.
நிர்வாகிகளின் உதவியோடு எழுதலாம்
மாணவர்கள் இந்தியில் தங்களது பெயரை எழுத முடியாவிட்டால் நண்பர்களின் உதவியோடு எழுதலாம். அல்லது மார்ச் 5 முதல் 10 வரையிலான தேதிகளில் பிஜிபி அலுவலகத்தில் இருக்கும் நிர்வாகிகளின் உதவிகளை நாடலாம் என்றும் சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சான்றிதழில் ஏன் இந்தி?
இந்த ஆண்டு நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் மாணவர்களுக்கு வழங்கப்படும் சான்றிதழ்களில் இந்தியில் பெயர் இடம்பெற்றிருக்கும் என்பதை ஐஐஎம் கூறியுள்ளது. பொதுவாக சான்றிதழ்களில் ஆங்கிலத்தில் மட்டுமே பெயர் எழுதப்படும் நிலையில் இந்தியில் பெயரை குறிப்பிட வேண்டிய அவசியம் என்ன என்று மாணவர்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது.