வேலைக்கு பை பை.. 2020 தேர்தல் இலக்கு.. கட்சி தொடங்கிய முன்னாள் ஐஐடி மாணவர்கள்!
டெல்லி: ஐஐடியின் முன்னாள் மாணவர்கள் 50 பேர் சேர்ந்து புதிய அரசியல் கட்சியைத் துவக்கியுள்ளனர்.
இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இந்திய தொழில்நுட்ப கழகம் (ஐஐடி) இயங்கி வருகிறது. இதில் படிக்கும் மாணவர்கள் மிகவும் திறமைசாலிகளாகக் கருதப்படுகின்றனர். காரணம் அதில் படிக்க மாணவர்களுக்கு இடம் கிடைப்பது கடினம். அந்தளவிற்கு போட்டி நிறைந்தது. எனவே, அதில் பயில்பவர்கள் மிகவும் திறமைசாலிகளாகவே வெளிவருகின்றனர்.
இந்நிலையில், நாடு முழுவதும் உள்ள பல்வேறு ஐஐடிக்களில் படித்த 50 மாணவர்கள் ஒன்று சேர்ந்து, தங்களது முழுநேர வேலையை ராஜினாமா செய்து விட்டு, புதிய அரசியல் கட்சி ஒன்றைத் தொடங்கியுள்ளனர். அந்தக் கட்சிக்கு பகுஜன் ஆசாத் கட்சி எனப் பெயரிடப்பட்டுள்ளது.
இந்தப் புதிய கட்சியை தேர்தல் கமிஷனில் பதிவு செய்வதற்கான வேலைகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
தற்போது இந்த அமைப்பில் உள்ள ஐம்பது பேரும் எஸ்.சி., எஸ்.டி. மற்றும் ஓபிசி பிரிவைச் சேர்ந்தவர்கள். எனவே, தங்கள் பிரிவினருக்கு மறுக்கப்படும் சலுகைகளுக்காகவும், உரிமைக்காகவும் தாங்கள் போராட இருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து 2015ம் ஆண்டு பேட்சை சேர்ந்தவரும், இந்த அமைப்பின் தற்போதைய தலைவராக இருப்பவருமான நவீன்குமார் கூறுகையில், “நாங்கள் வரும் 2019-ம் ஆண்டு நடைபெற உள்ள லோக்சபா தேர்தலில் போட்டியிடப் போவதில்லை. பீகார் மாநிலத்தில் 2020-ல் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலிலும், 2024-ல் நடைபெறும் லோக்சபா தேர்தலிலும் போட்டியிட ஆயத்தமாகி வருகிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.
பகுஜன் ஆசாத் கட்சியின் போஸ்டரில் அம்பேத்கர், சுபாஷ் சந்திரபோஸ், அப்துல்கலாம் உள்ளிட்ட தலைவர்களின் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன. தற்போதே சமூகவலைதளங்களில் தங்கள் புதிய கட்சிக்கான பிரச்சாரத்தை உறுப்பினர்கள் ஆரம்பித்து விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.