ஆபத்தில் ஆதார்? 40,000 பேரின் ஆதார் தகவல்களை திருடிய ஐஐடி பட்டதாரி இளைஞர், பெங்களூரில் கைது!
பெங்களூரு: ஆதார் இணையதளத்தில் இருந்து சுமார் 40,000 பேரின் தரவுகளை திருடியதாக ஐஐடி முதுகலை பொறியாளாரை பெங்களூர் போலீசார் கைது செய்துள்ளனர்.
ஆதார் தகவல்களைத் திருடியதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், பெங்களூருவில் உள்ள ஓலா வாகன போக்குவரத்து நிறுவனத்தில் பணியாற்றி வந்த அபினவ் ஸ்ரீவஸ்தவ் என்பவரை போலீசார் மடக்கி பிடித்தனர். விசாரணையில், காரக்பூரில் உள்ள ஐஐடியில் எம்.எஸ்.சி படித்ததாகவும், வேலை தேடி பெங்களூரு வந்ததாகவும், அப்போது நண்பர்களுடன் சேர்ந்து செயலி தயாரித்து அதை கூகுள் பிளே ஸ்டோரில் அறிமுகப்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்தார்.
போலீசாரின் அடுத்தகட்ட விசாரணையில், சட்டவிரோதமாக ஆதார் கார்டுகளின் தரவுகள் அடங்கியிருக்கும் சர்வருக்குள் நுழைந்து 40,000 பேரின் முகவரி, தொலைப்பேசி எண்கள், ஈமெயில் ஐடி, மற்றும் அவர்களது விபரங்களை திருடியது தெரியவந்துள்ளது. திருடப்பட்ட தரவுகளை ஸ்ரீவஸ்தவ் தவறாக பயன்படுத்தினாரா? அல்லது தான் வேலை பார்த்த நிறுவனத்திடம் வழங்கினாரா? என்ற கோணத்தில் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
ஆனால் ஸ்ரீவஸ்தவ்வால், ஆதார் சர்வரில் பதிவாகியுள்ள பயோமெட்ரிக் தகவல் பதிவுகளான கைரேகை, கண்விழிப்படலம் ஆகியவற்றை திருடமுடியவில்லை என்று பெங்களூரு போலீசார் தெரிவித்துள்ளனர். உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த ஸ்ரீவஸ்தவ்விற்கு யாரெல்லாம் உதவினார்கள் என்ற கோணத்திலும் போலீசாரின் விசாரணை நீளுகிறது. இவரது கைது குறித்து விளக்கம் அளித்துள்ள ஓலா நிறுவனம், தரவுகள் திருட்டிற்கும் தங்களும் எந்த தொடர்பும் இல்லை என்று தெரிவித்துள்ளது.
ஆதார் சர்வருக்கு ஸ்ரீவஸ்தவ் எப்படி உள்ளே நுழைந்து தரவுகளை திருடினார்? பாதுகாப்பு அம்சங்களை அதிகப்படுத்த என்ன செய்யபோகிறது மத்தியஅரசு? போன்ற கேள்விகளுக்கு ஆதார் அமைப்புதான் பதில் சொல்லவேண்டும்.