உதவியாளரை பலாத்காரம் செய்த ஐஐடி கவுஹாத்தி பேராசிரியர்: டிராபிக் ஜாமில் போலீசில் சிக்கினார்
கவுஹாத்தி: ஐஐடி கவுஹாத்தியில் பணிபுரியும் மூத்த பேராசிரியரான ஆலோக் குமார் கோஷல் அலுவலக உதவியாளராக இருக்கும் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
அஸ்ஸாம் மாநிலம் கவுஹாத்தியில் உள்ள ஐஐடியில் மூத்த பேராசிரியராக இருப்பவர் ஆலோக் குமார் கோஷல். அகாடமிக் விவகாரத் துறை டீனாகவும் உள்ளார். அவர் தனது அலுவலகத்தில் உதவியாளராக பணிபுரியும் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். சம்பவம் நடந்ததில் இருந்து அந்த பெண் வேலைக்கு வரவில்லை. இந்நிலையில் சம்பவம் நடந்து 10 நாட்கள் கழித்து அவர் பான்பஜார் காவல் நிலையத்தில் ஆலோக் மீது பலாத்கார புகார் தெரிவித்தார்.
அவரது புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் ஆலோக்கை கைது செய்ய ஐஐடி வளாகத்திற்கு செவ்வாய்க்கிழமை சென்றனர். ஆனால் போலீசார் வந்ததை பார்த்த ஆலோக் காரில் ஏறி தப்பியோடினார். போலீசார் அவரை துரத்திச் சென்றனர்.
இந்நிலையில் போக்குவரத்து நெரிசலில் சிக்கிய ஆலோக் காரில் இருந்து இறங்கி தப்பியோட முயன்றார். ஆனால் அதற்குள் போலீசார் அவரை கைது செய்தனர். கடந்த 2003ம் ஆண்டு ஐஐடி கவுஹாத்தியில் சேர்ந்த ஆலோக் தனது மகனுடன் கல்லூரி வளாகத்தில் இருக்கும் குடியிருப்பில் வசித்து வருகிறார்.
பலாத்கார சம்பவத்தை அடுத்து ஆலோக் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். மேலும் டீனாகவும் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார் என்று ஐஐடி நிர்வாகம் தெரிவித்துள்ளது.