சென்னை ஐஐடி மாட்டுக்கறி விழாவுக்கு ஆதரவு- 2017-ல் ஃபேஸ்புக் போஸ்ட்-ஜார்க்கண்ட் பேராசிரியர் கைது!
ஜாம்ஷெட்பூர்: சென்னை ஐஐடி மாட்டுக்கறி திருவிழாவுக்கு ஆதரவாக 2017-ல் ஃஃபேஸ்புக்கில் பதிவிட்டதற்காக ஜார்க்கண்ட் பேராசிரியர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
2017-ம் ஆண்டு மிருகவதை தடைச் சட்டத்தில் மத்திய அரசு சில திருத்தங்கள் செய்து அரசாண வெளியிட்டது. இது நாடு முழுவதும் பெரும் சர்ச்சையானது.
இச்சட்ட திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சென்னை ஐஐடியில் மாட்டுக்கறி திருவிழாவை இடதுசாரி மாணவர்கள் நடத்தினர். இதற்கு வலதுசாரி மாணவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இத்திருவிழாவை ஆதரித்து அப்போது ஃபேஸ்புக்கில் ஜார்க்கண்ட் அரசு கல்லூரி பேராசிரியர் ஜீத்ராய் ஹன்ஸ்டா கருத்துகளை பதிவிட்டிருந்தார். இது தொடர்பாக பாஜகவின் மாணவர் அமைப்பான ஏபிவிபி அப்போது போலீசில் புகார் செய்தது.
இதையடுத்து சர்ச்சைக்குரிய கருத்துகளை ஜீத்ராய் பதிவில் இருந்து நீக்கியிருந்தார். இது குறித்து கல்லூரி நிர்வாகமும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இந்நிலையில் 2017-ம் ஆண்டு ஃபேஸ்புக் பதிவுக்காக தற்போது ஜீத்ராய் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.