மத்திய அரசு தரவரிசையில் சென்னை ஐ.ஐ.டி முதலிடம்- அண்ணா பல்கலை லிஸ்ட்டில் இல்லவே இல்லை!
டெல்லி: இந்தியாவின் தரம் வாய்ந்த பல்கலைக்கழகங்களின் தரவரிசைப் பட்டியலை முதன்முறையாக மத்திய அரசு வெளியிட்டுள்ள நிலையில் இதில் அண்ணா பல்கலைக்கழகம் இடம்பெறவில்லை. சென்னை ஐ.ஐ.டி முதலிடம் பிடித்துள்ளது.
உலக அளவில் பல்கலைகளின் செயல்பாடுகளை பல்வேறு தகுதிகளின் அடிப்படையில் இங்கிலாந்தை சேர்ந்த குவாக்வாரெல்லி சைமண்ட்ஸ் நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச அளவில் தரவரிசை பட்டியலை வெளியிடும்.
இதில் இந்திய பல்கலைகள் இடம் பெறுவதில்லை என குறை இருந்தது.
ஸ்மிரிதி இரானி அறிவிப்பு:
எனவே, இந்த பிரச்னையை போக்க இந்திய பல்கலைகளை மத்திய அரசே தரம் பிரித்து தர வரிசை பட்டியலை வௌியிடும் என கடந்த ஆண்டு மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானி அறிவித்தார்.
என்.ஐ.ஆர்.எப்:
அதன்படி தேசிய பல்கலைகள் தரவரிசை நிறுவனமான என்.ஐ.ஆர்.எப் நிறுவப்பட்டு இந்தியாவின் அனைத்து பல்கலைகளும் பங்கேற்று தங்களின் பாடத்திட்டம், கல்லுாரி கட்டமைப்பு, வேலை வாய்ப்பு, பயிற்சி முறை உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் பெற்றது.
சென்னை ஐ.ஐ.டி முதலிடம்:
இதை தொடர்ந்து முதல் தேசிய தரவரிசைப் பட்டியலை நேற்று மத்திய அரசு வெளியிட்டது. இதன்படி சென்னை ஐ.ஐ.டி தேசிய அளவில் முதலிடம் பெற்றுள்ளது. மும்பை மற்றும் கரக்பூர் ஐ.ஐ.டிக்கள் அடுத்த, இரண்டு இடங்களை பெற்றுள்ளன.
அண்ணா இடம் பெறவில்லை:
தமிழகத்தில் முன்னணியில் உள்ள அண்ணா பல்கலை இந்த பட்டியலில் இடம் பெறவில்லை. அண்ணா பல்கலையில் இருந்து பல்கலையின் விவரங்களை மத்திய அரசுக்கு அளிக்க வில்லை என கூறப்படுகிறது. பாரதியார் பல்கலைக்கழகம் 14 ஆம் இடம், கோவை அம்ரிதா பல்கலைக்கழகம் 19, தமிழக கால்நடை மருத்துவ பல்கலைக்கழகம் 36, வேளாண் பல்கலைக்கழகம் 40வது இடங்களைப் பிடித்துள்ளன.