நாடு முழுவதும் ஐ.ஐ.டி மற்றும் பல்கலைக் கழகங்களில் தொடங்கப்பட்டன பெரியார்-அம்பேத்கர் வாசகர் வட்டம்!!
டெல்லி/மும்பை: சென்னை ஐ.ஐ.டி.யில் பெரியார்-அம்பேத்கர் பெயரிலான அமைப்புக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில் நாடு முழுவதும் பல்வேறு ஐ.ஐ.டி. மற்றும் பல்கலைக் கழகங்களில் பெரியார்- அம்பேத்கர் பெயரிலான மாணவர் வாசகர் வட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன.
சென்னை ஐ.ஐ.டி.யில் கடந்த ஓராண்டாக பெரியார்- அம்பேத்கர் பெயரிலான மாணவர் வாசகர் வட்டம் நடத்தப்பட்டு வந்தது. இந்த அமைப்பு பிரதமர் மோடி மற்றும் இந்துத்துவா கொள்கைகளை விமர்சிக்கிறது எனக் கூறி மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்துக்கு ஒரு அனாமதேய கடிதம் அனுப்பி வைக்கப்பட்டது.
இக்கடிதத்தின் அடிப்படையில் கருத்துகளைத் தெரிவிக்குமாறு சென்னை ஐ.ஐ.டி.க்கு மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் அறிவுறுத்தல் கடிதம் அனுப்பியது. இதனையடுத்து சென்னை ஐ.ஐ.டி. நிர்வாகமானது பெரியார்-அம்பேத்கர் பெயரிலான மாணவர் வாசகர் வட்டத்துக்கு தடை விதித்தது.
இந்த தடை விவகாரம் நாடு முழுவதும் பெரும் எதிர்ப்பலைகளை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியிலும் தமிழ்நாட்டிலும் பல்வேறு கட்சிகள், இயக்கங்கள் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றன.
இந்த நிலையில் சென்னை ஐ.ஐ.டிக்கு தெரிவிக்கும் வகையில் டெல்லி. மும்பை, கான்பூர் ஐ.ஐ.டி. நிறுவனங்களில் அம்பேத்கர்- பெரியார் பெயரில் மாணவர் வாசகர் வட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன. ஐஐடி மும்பையில் 'அம்பேத்கர்-பெரியார்-பூலே' பெயரில் வாசகர் வட்டம் தொடங்கப்பட்டுள்ளது. ஜோதிராவ் பூலே, மகாராஷ்டிரா மண்ணில் ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காகப் போராடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோல் ஜாதவ்பூர் பல்கலைக் கழகத்திலும் பெரியார்-அம்பேத்கர் மாணவர் வாசகர் வட்டம் தொடங்கப்பட்டுள்ளது. டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்திலும் அம்பேத்கர்-பெரியார் மாணவர் வாசகர் வட்டம் தொடங்கப்பட்டுள்ளது
ஃபேஸ்புக், ட்விட்டர் சமூக வலைதளங்களில் சென்னை ஐ.ஐ.டியின் தடைக்கு எதிராக தனிப் பக்கங்கள் தொடங்கப்பட்டு தீவிர பிரசாரம் மேற்கொள்ளப்பட்டும் வருகின்றன.