ஓடி போன சம்மந்திகள்.. மணமகளின் தாயாரை இழுத்து கொண்டு ஓடிய மணமகனின் தந்தை.. சோகத்துடன் ரிட்டர்ன்!
ஓடிப்போன மணமகனின் தந்தை திரும்பி வந்தார்
சூரத்: மகனோட வருங்கால மாமியாருடன் கல்யாணத்துக்கு முன்னாடி ஓடிப் போனாரே ஒரு அப்பா.. அந்த ஜோடி இப்ப ஊர் திரும்பி விட்டதாம். இருவரும் பிரிந்தும் விட்டார்கள். யாரும் அவர்களுடன் பேசுவதில்லையாம்.
சூரத்தை சமீபத்தில் இந்த ஜோடி பரபரப்புக்குள்ளாக்கியது. அதாவது சூரத்தைச் சேர்ந்த அந்த 48 வயதுக்காரர் தனது மகனுக்கு பெண் பார்த்து நிச்சயம் செய்திருந்தார். அந்தப் பெண்ணின் தாயார் வேறு யாருமல்ல, மாப்பிள்ளையின் அப்பாவோட சிறு வயது காதலி!
இளம் வயதில் இவர்களது காதலுக்கு இரு வீடுகளிலும் எதிர்ப்பு இருந்ததால் இருவரும் கல்யாணம் செய்து கொள்ள முடியாமல் ஆளுக்கு ஒரு பக்கமா பிரிந்து போனார்கள். அவர்களுக்கு வேறு நபர்களுடன் திருமணமும் நடந்தது. இருந்தாலும் இரண்டும் மனசார பிரியவில்லை. உள்ளுக்குள் காதலை கள்ளத்தனமாக நெய் விட்டு வளர்த்துக் கொண்டே இருந்தனர்.
அவமானம்
இந்த நிலையில்தான் தங்களது பிள்ளைகளுக்கு நிச்சயம் செய்தனர். இந்த சமயத்தில் பழைய காதல் வந்து மனசை பிறாண்ட இருவரும் கல்யாணத்துக்கு முன்னாடி ஓடிப் போய் விட்டனர். இரு குடும்பமும் அதிர்ந்து போனது. நிலை குலைந்து போன குடும்பத்தினர் கல்யாணத்தை ரத்து செய்தனர். இரு குடும்பங்களும் நிம்மதியில்லாமல், அவமானத்தில் கூனிக் குறுகிப் போனது.
ஓடிப்போனவர்
இந்த நிலையில் இந்த ஜோடி தற்போது தத்தமது வீடுகளுக்குத் திரும்பியுள்ளது. இரு குடும்பத்தினரும் இவர்களிடம் இறுக்கமாக உள்ளனராம். இதுகுறித்து அந்தப் பெண்ணின் கணவர் முகுல் கூறுகையில், அவரை ஏற்க நான் விரும்பவில்லை. உண்மையிலேயே திருந்தி வருவதாக அவர் கூறினால் ஓடிப் போன உடனேயே வந்திருக்க வேண்டும். ஆனால் பல நாட்கள் கழித்து சாவகாசமாக அவர் வந்துள்ளார். இன்னொரு ஆணுடன் பல நாட்கள் தங்கி விட்டு வந்தவளை நான் ஏற்க முடியாது என்று கூறி விட்டார்.
காதல் வேதனை
அந்தப் பெண்ணின் முன்னாள் காதலரை அவரது குடும்பத்தினர் அரைகுறையாக ஏற்றுக் கொண்டுள்ளனர். அவரோ தனது முன்னாள் காதலிக்கு தன்னால் ஏற்பட்ட சிக்கலுக்காக வருத்தம் தெரிவித்துள்ளார். அதேசமயம், தன்னால் தனது முன்னாள் காதலிக்கு அவரது வீட்டில் வேதனை ஏற்பட்டால் அதை தன்னால் தாங்கிக் கொள்ள முடியாது என்றும் கூறியுள்ளார்.
வருத்தம்
இருவரும் திரும்பி வந்து விட்டாலும் கூட பெரும் மனப் புழுக்கத்தில் உள்ளனராம். இயல்பாக இருக்க முடியவில்லையாம். அதிலும் அந்தப் பெண்தான் மிகப் பெரிய மன அழுத்தத்தில் உள்ளாராம். அவரை சகஜ நிலைக்குக் கொண்டு வர உறவினர்கள் முயல்கிறார்களாம். ஆனால் கணவர் தன்னை நிராகரித்து விட்டதால் அவர் பெரும் வருத்தத்தில் உள்ளாராம்.
இந்த நிலையில் நேற்று காதலர் தினம் என்பதால் அவர்களைப் பற்றி குஜராத் மீடியாக்கள் செய்தி போட்டு கொண்டுள்ளன.