வேட்பாளர்களை கடத்த இந்தியன் முஜாகிதீன் சதி திட்டம்: உளவுத்துறை எச்சரிக்கை
நாடாளுமன்ற லோக்சபா தேர்தல் வரும் ஏப்ரல் 7ம் தேதி தொடங்கி மே 12ம் தேதி வரை 9 கட்டங்களாக நடைபெறுகிறது. இதைத் தொடர்ந்து, நாடு முழுவதும் தேர்தலுக்கான ஏற்பாடுகள் முழுவீச்சுடன் நடைபெற்று வருகிறது.
தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்துவதில் தேர்தல் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். வாகன சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த சூழ்நிலையில் தேர்தலை சீர்குலைக்க நக்சலைட்டுகள் உள்ளிட்ட தீவிரவாதிகள் சதியில் ஈடுபட வாய்ப்புள்ளதால் நாடு முழுவதும் போலீசார் மற்றும் துணை ராணுவ படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
அதேபோல் எல்லை வழியாக பாகிஸ்தானில் உள்ளிட்ட அண்டைநாடுகளில் இருந்து ஊடுருவி கள்ள நோட்டுகளை கொண்டு வந்து புழக்கத்தில் விட வாய்ப்புள்ளதால், ஊடுருவல்களை தடுக்கவும் தீவிர கண்காணிப்பும் நடைபெற்று வருகிறது.
இதற்கிடையே, மத்திய உளவுத்துறை மத்திய அரசுக்கு ரகசிய அறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. அதில் தேர்தல் நேரத்தில் அதனை சீர்குலைக்கும் விதமாக தீவிரவாதிகள் சதிச் செயலில் ஈடுபட திட்டமிட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள யாசின் பட்கலை விடுவிக்க வலியுறுத்தி தேர்தல் நேரத்தில் அதிரடியாக வேட்பாளர்கள் மற்றும் அரசியல் தலைவர்களை கடத்த இந்தியன் முஜாகிதீன் தீவிரவாதிகள் சதி செய்யலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நாடு முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பாட்னா, ஹைதராபாத் உள்ளிட்ட நகரங்களில் நடைபெற்ற குண்டு வெடிப்பு தொடர்பாக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நேபாள எல்லையில் இந்தியன் முஜாகிதீன் தீவிரவாதி யாசின் பட்கலை போலீசார் கைது செய்தனர்.
கடந்த 2008ம் ஆண்டு டெல்லியில் உள்ள கன்னோட் பிளேஸ் என்ற இடத்தில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் 26 பேர் பலியாயினர். 133 பேர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவத்திலும் யாசின் பட்கலுக்கு தொடர்பு உள்ளது என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
தற்போது அவன் மற்றும் அவனது கூட்டாளிகள் மன்சூர் இமாம், அகமது ஆகியோர் மகாராஷ்டிரா போலீசார் வசம் ஒப்படைக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களை விடுவிக்க வேண்டி தீவிரவாதிகள் நாட்டின் பல்வேறு முனைகளிலும் ரகசிய தாக்குதல்களில் ஈடுபட வாய்ப்புள்ளதாக உளவுத்துறையின் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.