டிசம்பர் 4 முதல் 6 வரை தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு... இந்திய வானிலை மையம் அலெர்ட்!
டிசம்பர் 4ம் தேதி முதல் 3 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுவையில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
Recommended Video
டெல்லி : டிசம்பர் 4ம் தேதி முதல் தொடர்ந்து 3 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுவையில் பரவலாக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் உருவான ஓகி புயல் அரபிக் கடல் வழியாக லட்சத்தீவு அருகே சென்றுவிட்டது. ஓகி புயல் காரணமாக கன்னியாகுமரி மற்றும் கேரளாவில் கனமழையுடன், புயல் காற்றும் வீசியது. இதனால் கன்னியாகுமரி மாவட்டம் பலத்த சேதத்தை சந்தித்துள்ளது. அந்த மாவட்டம் முழுவதும் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன.
விரைவில் மின் இணைப்பு வழங்கப்படும் என்று முதவ்ர் பழனிசாமி தெரிவித்துள்ளார். இதே போன்று திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டமும் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ளது. பேய்க்காற்று ஓய்ந்த நிலையில் அங்கு இன்னும் மழை நீடிக்கிறது.
இன்று மழை பெய்யுமா?
இதனிடையே இந்திய வானிலை மையம் மழை குறித்த புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் இன்று அந்தமான் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் கனமழை பெய்யும் என்றும், தமிழகம் மற்றும் கேரளாவில் பரவலாக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேரளக் கடல் பகுதியில் காற்று
லட்சத்தீவு பகுதியில் காற்றின் வேகம் மணிக்கு 120 கிலோ மீட்டர் முதல் 145 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே போன்று கேரளா, கர்நாடக கடல் பகுதிகளிலும் பலத்த காற்று வீசும் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
மீனவர்கள் தவிர்க்க வேண்டிய பகுதிகள்
கேரளா, கர்நாடகா கடல் பகுதி மற்றும் லட்சத்தீவு அந்தமான தீவுகள் பகுதிகளில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என்று இந்திய வானிலை மையம் முன் எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்று மட்டுமே கனமழை இருக்கும் என்றும் நாளை தமிழகத்திற்கு மழை பாதிப்பு இல்லை என்றும் வானிலை மையம் கூறியுள்ளது.
3 நாட்களுக்கு தொடர் மழை
இதனையடுத்து டிசம்பர் 4ம் தேதி முதல் டிசம்பர் 6ம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்த நிலையில் இதன் எதிரொலியாகவே டிசம்பர் 4 முதல் 3 நாட்களுக்கு தொடர்ச்சியாக மழை இருக்கும் என்று தெரிகிறது.