மும்பை நோக்கி நகர்கிறது 'ஓகி'... 48 மணி நேரத்தில் வலுவிழக்கும் என கணிப்பு!
குமரி, கேரளாவை புரட்டிப் போட்ட ஓகி புயல் மும்பை நோக்கி நகர்வதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மும்பை : கன்னியாகுமரி, கேரளாவை ஒரு கை பார்த்த ஓகி புயல் லட்சத்தீவுகள் நகர்ந்த நிலையில் புயல் மும்பை நோக்கி நகர்வதாகவும் குஜராத் கடல் பகுதியில் புயல் வலுவிழக்கும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
கடந்த 2 தினங்களுக்கு முன்னர் கன்னியாகுமரி கடல் பகுதியில் உருவான ஓகி புயலானது கனமழை, சூறைக்காற்று என்று குமரி மாவட்டத்தை உருக்குலைத்துவிட்டது. கன்னியாகுமரி வழியாக கேரளா கடல் பகுதிக்கு பயணித்த ஓகி புயல் கேரளாவிலும் பலத்த சேதத்தை ஏற்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து லட்சத்தீவு பகுதிக்கு நகர்ந்த ஓகியும் அங்கும் பேய்க்காற்று, கனமழையை தந்துள்ளது. ஓகி புயல் காரணமாக தமிழகம், கேரளாவில் 14 பேர் உயிரிழந்திருப்பதாக தெரிகிறது. மேலும் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற பல மீனவர்கள் கடலில் தத்தளித்து வருகின்றனர்.
தேசிய பேரிடர் மீட்புக் குழு, கடற்படை, கடலோர காவற்படையினர் இதுவரை 233 மீனவர்களை மீட்டுள்ளனர். மேலும் புயல் தாக்கிய பகுதிகளில் இருந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களை இடம்பெயரச் செய்துள்ளனர்.
தமிழகம், கேரளாவில் கோரத் தாண்டவம் ஆடிய ஓகி புயலானது வடக்கே மும்பையை நோக்கி நகர்ந்துள்ளதாக இந்திய வானிலை மையத்தினி திருவனந்தபுரம் இயக்குனர் சுதேவன் தெரிவித்துள்ளார். புயலின் பாதை தொடர்ந்து கண்காணிக்கப்படுவதாகவும் அடுத்த 48 மணி நேரத்தில் புயல் குஜராத் கடல் பகுதியில் வலுவிழக்க வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புயல் வலுவிழந்து காற்றழுத்தமாக மாறுவதால் காற்றின் வேகம் குறைய வாய்ப்பு இருக்கிறது. எனினும் கடல் அலைகிள் 15 அடி வரை எழும்பும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.