வெளிநாட்டில் இருந்து வெங்காயம் இறக்குமதி..அடுத்தவாரம் இந்தியா வருகிறது.. விலை குறையும்?
டெல்லி: விண்ணைத் தொடும் வெங்காய விலையை குறைக்கும் வகையில் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் வெங்காயம் அடுத்த வாரம் இந்தியா வந்தடைகிறது.
நாடு முழுவதும் வெங்காய விலை மிக கடுமையாக உயர்ந்துள்ளது. ஒரு கிலோ வெங்காயத்தின் விலை ரூ150 வரை விற்பனையாகிறது.
வெங்காய விலையை குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றன. இந்த நிலையில் வெங்காய விலை குறைப்பு தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
இக்கூட்டத்தில் வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல், வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது நுகர்வோர் விவகாரத்துறை செயலாளர் அவினாஷ் ஸ்ரீவத்சவா, வெங்காய விலை குறைப்புக்கான நடவடிக்கைகளை விவரித்தார்.
ஸ்ரீவத்சவா கூறுகையில், 1.2 லட்சம் டன் வெங்காய இறக்குமதிக்கு மத்திய அரசு ஒப்புதல் கொடுத்துள்ளது. இதில் 21,000 டன் வெங்காயம் இறக்குமதிக்கு ஒப்பந்தம் விடப்பட்டுள்ளது. மேலும் 15,000 டன் வெங்காய இறக்குமதிக்கு ஒப்பந்தம் விடும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அடுத்த வாரம் இறக்குமதி வெங்காயம் இந்தியா வந்தடையும் என்றார்.
இக்கூட்டத்தில் கேபினட் செயலாளர் ராஜீவ் கவுபா, பிரதமரின் ஆலோசகர் பிகே சின்ஹா ஆகியோரும் பங்கேற்றனர்.