"தற்கொலைப் படை தாக்குதல்களுக்கு மதம் கிடையாது".. விடுதலைப் புலிகளை மேற்கோள் காட்டி இம்ரான் பேச்சு
Recommended Video
ஜம்மு: "யாரும் மதத்தை காரணமாக வைத்து தற்கொலை படை தாக்குதல்களை நடத்துவதில்லை. அப்படிப் பார்த்தால் இந்துக்களான விடுதலை புலிகள்தான் அதிக அளவில் தற்கொலை படைத் தாக்குதல்களை நடத்தியவர்கள் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கூறியுள்ளார்.
காஷ்மீரில் சிஆர்பிஎப் வீரர்கள் 40 பேரை கொடூரமாகக் கொன்ற தீவிரவாத அமைப்பான ஜெய்ஷ் இ முகம்மது அமைப்பின் முகாம்களை பாகிஸ்தானுக்குள் புகுந்து குண்டு வீசித் தகர்த்தது இந்தியா.
இதையடுத்து இரு நாடுகளுக்கும் இடையே எல்லையில் பெரும் பதட்டம் ஏற்பட்டது. இந்திய, பாகிஸ்தானிய விமானப்படை போர் விமானங்கள் வானில் சண்டையில் குதித்தன.
சிறைபிடிப்பு
இதில் இந்திய வீரர் அபிநந்தன் பாகிஸ்தானுக்குள் போய் சிக்கிக் கொண்டார். அவரை பாகிஸ்தான் படையினர் சிறை பிடித்தனர். இது உலக அளவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.
இந்தியா எச்சரிக்கை
அவரை விடுவித்தாக வேண்டும் என்று இந்தியா நிர்ப்பந்தம் கொடுக்க ஆரம்பித்தது. இந்தியாவுக்கு ஆதரவாக பல்வேறு நாடுகளும் குரல் கொடுக்க ஆரம்பித்தன. அபிநந்தன் பாதுகாப்புக்கு குறைபாடு ஏற்பட்டால் பொறுத்துக் கொள்ள மாட்டோம் என்றும் இந்தியா எச்சரித்தது.
விடுதலை புலிகள்
இந்த நிலையில் அபிநந்தனை விடுதலை செய்வதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இன்று அறிவித்தார்.
பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் இதற்கான அறிவிப்பை வெளியிட்டு அவர் பேசினார். அப்போது அவர் விடுதலைப் புலிகள் அமைப்பையும் தனது பேச்சின்போது குறிப்பிட்டார். அவர் சொன்னதாவது:
தற்கொலை படை தாக்குதல்
"தீவிரவாதத்திற்கு மதம் கிடையாது. தற்கொலை படை தாக்குதல்கள் மதத்தின் பெயரால் நடப்பது இல்லை. நியூயார்க் இரட்டை கோபுர தாக்குதலுக்கு முன்பாக உலக அளவில் அதிக அளவில் தற்கொலை படை தாக்குதலை நடத்தியது விடுதலை புலிகள்தான். தாக்குதல் நடத்தியவர்கள் அனைவருமே இந்துக்கள். ஆனால் மதத்தின் பெயால் நடத்தவில்லை. மாறாக தங்களது விரக்தி மற்றும் கோபத்தின் விளைவாகவே அதனை செய்தனர்." என்று கூறினார் இம்ரான் கான்.