44 பேர் கொல்லப்பட்ட ஹைதராபாத் குண்டு வெடிப்பு வழக்கில் 2 பேர் குற்றவாளிகள்.. நீதிமன்றம் தீர்ப்பு
ஹைதராபாத்: ஹைதராபாத்தில் 44 பேர் உயிரிழக்க காரணமான இரட்டை குண்டுவெடிப்பு வழக்கில் 2 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 3 பேருக்கு விடுதலை கிடைத்துள்ளது.
கடந்த 2007 ம் ஆண்டு, ஆகஸ்ட் 25ம் தேதி ஹைதராபாத்தின் கோகுல்சாட் உணவகம் மற்றும் லும்பினி பார்க் பகுதியில் உள்ள திறந்தவெளி சினிமா தியேட்டரில் அடுத்ததடுத்து குண்டுவெடிப்புகள் நிகழ்த்தப்பட்டன.
இதில் 44 பேர் உயிரிழந்தனர். 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். சம்பவம் நடந்த அடுத்த நாள், 19 இடங்களில் வெடிக்காத குண்டுகள் கண்டெடுக்கப்பட்டன.
விசாரணையில், இந்தியன் முஜாஹிதீன் தீவிரவாத அமைப்பை சேர்ந்த 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
வழக்கு விசாரணை ஹைதராபாத் இரண்டாவது கூடுதல் மெட்ரோபாலிடன் செசன்ஸ் கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கில், இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
அனீக் ஷாபீக் மற்றும் இஸ்மாயில் சவுத்ரி ஆகியோர் குற்றவாளிகள் என்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மற்ற மூவரில் இருவர் விடுதலை செய்யப்பட்டனர். மற்றொருவர் குறித்த தீர்ப்பும், குற்றவாளிகளுக்கான தண்டனை விவரமும் அடுத்த வாரம் திங்கள்கிழமை அறிவிக்கப்பட உள்ளது.