தேர்வு எழுதியது 12,000 பேர், தேர்ச்சி பெற்றதோ 20,000 பேர்: இந்த கூத்து ஆக்ராவில்
ஆக்ரா: உத்தர பிரதேசத்தில் உள்ள அம்பேத்கார் பல்கலைக்கழகத்தில் 12 ஆயிரத்து 800 பேர் பி.எட். தேர்வு எழுதிய நிலையில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தேர்ச்சி அடைந்துள்ளது பலரையும் வியக்க வைத்துள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள அம்பேத்கார் பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள கல்லூரிகளைச் சேர்ந்த 7 ஆயிரத்து 800 பேர் பி.எட். தேர்வு எழுதியுள்ளனர். ஆனால் 20 ஆயிரத்து 89 பேர் தேர்ச்சி அடைந்துள்ளது பல்கலைக்கழக அதிகாரிகளையே வியக்க வைத்துள்ளது.
இது குறித்து பல்கலைக்கழக செய்தித் தொடர்பாளர் பேராசிரியர் மனோஜ் ஸ்ரீவஸ்தவா கூறுகையில்,
12 ஆயிரத்து 800 பேர் தேர்வு எழுதியுள்ள நிலையில் 20 ஆயிரத்து 89 பேர் எப்படி தேர்ச்சி பெற்றிருக்க முடியும் என்பது குறித்து விசாரணை நடத்த பல்கலைக்கழக துணை வேந்தர் வி.சி. முகமது முஜம்மில் குழு ஒன்றை அமைத்துள்ளார்.
12 ஆயிரத்து 800 பேர் மட்டுமே அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகளில் படித்துள்ளனர். மீதமுள்ள 7 ஆயிரம் மாணவர்கள் தனியார் கல்லூரிகளில் படித்துள்ளனர். பி.எட். தேர்வு முடிவுகளை தயார் செய்த தனியார் ஏஜென்சி தன்னிடம் 12 ஆயிரத்து 800 பேரின் தகவல்கள் மட்டுமே உள்ளது என்று கூறியபோது தான் இது குறித்து தெரிய வந்தது.
தனியார் கல்லூரிகள் தங்களிடம் கூடுதல் இருக்கைகள் இருப்பதாகக் கூறி அதிக மாணவர்களை சேர்த்துள்ளது. அவ்வாறு சேர்க்கப்பட்டுள்ள மாணவர்களும் தேர்வு எழுதியுள்ளனர். இது குறித்து விளக்கம் கேட்டு அனைத்து தனியார் கல்லூரிகளுக்கும் முஜம்மில் கடிதம் அனுப்பியுள்ளார் என்றார்.