புது ஆளுநர் வந்தாச்சு.. பதவியேற்க ராஜ்பவன்தான் இல்லை.. புதிய சிக்கலில் ஆந்திரா!
விஜயவாடா: ஆந்திர மாநிலத்திற்கு புதிய ஆளுநராக பாஜக-வின் மூத்த தலைவர்களுள் ஒருவரான ஒடிசா மாநிலம் புவனேஸ்வரை சேர்ந்த பிஸ்வபூஷன் ஹர்சந்தன் என்பவர் நியமிக்கப்பட்டார். ஆனால் ஆந்திராவில் ஆளுநர் மாளிகை இல்லாததால் அவர் ஆளுநராக பதவியேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்திற்கு ஈ.எஸ்.எல்.நரசிம்மன் ஆளுநராக பணியாற்றி வந்தார். கடந்த 2014 ம் ஆண்டு ஆந்திர மாநிலம் இரண்டாக பிரிக்கப்பட்டு தெலுங்கானா மாநிலம் உருவாக்கப்பட்டது. அப்போதும் நரசிம்மனே ஆளுநராக நீடித்து வந்தார். இந்நிலையில் ஆந்திராவுக்கு புதிய மற்றும் முதல் ஆளுநராக பிஸ்வபூஷன் ஹர்சந்தனை நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டார்.
2014 ம் ஆண்டு ஆந்திர மாநிலம் இரண்டாக பிரிக்கப்பட்டு தெலுங்கானா மாநிலம் உருவாக்கப்பட்டபோது, ஆந்திராவின் தலைநகராக இருந்த ஹைதராபாத் புதிய மாநிலமான தெலுங்கானாவுக்கு கொடுக்கப்பட்டது. இருப்பினும் அடுத்து வரும் பத்து ஆண்டுகள் ஹைதராபாத்தை இரு மாநிலங்களும் தலைநகராக பயன்படுத்திக்கொள்ளலாம் என்று ஒப்பந்தம் போடப்பட்டது.
இந்த நிலையில்தான் ஆந்திர முதல்வராக இருந்த சந்திரபாபு நாயுடு குண்டூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி நகரை ஆந்திர தலைநகராக அறிவித்து அங்கு கட்டமைப்பு பணிகளை மேற்கொண்டு வந்தார். இதற்காக கிருஷ்ணா நதிக்கரையில் உள்ள உத்தண்டராயனிபாளையம் என்ற இடத்தில் பிரதமர் மோடி தலைமையில் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
ஆஹா.. 'அழகு தமிழிலும்' வெளியானது உச்ச நீதிமன்ற தீர்ப்புகள்.. தமிழகத்தின் குரலுக்கு மதிப்பு
புதிய தலைநகரம் 16.9 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில், சுமார் ஒன்றரைக் கோடி மக்கள் வாழ்வதற்கு ஏற்ற விதத்தில் அமையவேண்டும் என்றும், மின்சாரம், நீர் போன்றவற்றிக்கு தட்டுப்பாடு இல்லாத, மாசு ஏற்படாத தூய்மையான நகராகவும் இந்த பிரதேசம் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் திட்டமிடப்பட்டிருந்தது.
இதற்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போதுதான் தேர்தல் நடைபெற்று ஆட்சி மாற்றம் நடைபெற்றது. இதில் சந்திரபாபு வீழ்த்தப்பட்டு ஜெகன் ஆட்சிப் பொறுப்புக்கு வந்தார். அமராவதி நகரம் இன்னும் முழுமை அடையாததால் அங்கு ஆளுநர் தங்கும் ராஜ்பவன் கட்டப்படவில்லை.
இந்நிலையில் ஆந்திர மாநிலத்தின் முதல் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள பிஸ்வபூஷன் ஹர்சந்தன் எங்கு தங்குவார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனால் அவர் பதவி ஏற்க உள்ள தேதியும் இன்னும் முடிவு செய்யப்படவில்லை.