அறிவியல் துறையில் அதிக முதலீடு செய்யாத முட்டாள் அரசியல்வாதிகள்- விஞ்ஞானி ராவ்
பெங்களூரை சேர்ந்த விஞ்ஞானி சி.என்.ஆர்.ராவுக்கு பாரத ரத்னா விருதை மத்திய அரசு அறிவித்து உள்ளது. இதைத்தொடர்ந்து, அவர் நேற்று பெங்களூரில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
அதிநவீன விஞ்ஞானத்தை கொண்ட நாடுகள் தான் உலகளவில் உண்மையான வளர்ச்சியை எட்டி உள்ளது. அவ்வாறு இல்லாத நாடுகள் தெரியாமல் போய் விடும். அதனால் எதிர்கால இந்தியா, விஞ்ஞானத்தில் தான் உள்ளது.
இதை கருத்தில் கொண்டு இந்தியாவின் பாதுகாப்புக்காக கல்வி, விஞ்ஞான துறைகளில் அதிக நிதியை அரசு முதலீடு செய்ய வேண்டும். நாட்டின் பங்கு குறியீடு, தொழில் நன்றாக இருந்தால் மட்டும் நல்ல நிலையை எட்டி விட முடியாது.
நிரந்தரமாக நல்ல நிலைக்கு அதிநவீன விஞ்ஞானம் மிகவும் அவசியம். முன்னேற்றத்துக்கான வழி என்றால் அது விஞ்ஞானம் தான். இதன் மீது மறைந்த முன்னாள் பிரதமர் நேரு நம்பிக்கை கொண்டவர் என்பது மகிழ்ச்சிக்குரியது. ஆனால், விஞ்ஞான துறைக்கு அதிக ஒத்துழைப்பு கிடைக்காதது துரதிர்ஷ்டவசமானது.
கல்வி மற்றும் விஞ்ஞான துறையில் எவ்வளவு முதலீடு செய்கிறோமோ அதை பொறுத்து தான் நாட்டின் எதிர்காலம் இருக்கும். ஆனால் முட்டாள் அரசியல்வாதிகள் அறிவியல்துறைக்கு போதிய பணம் ஒதுக்குவது இல்லை.
இவ்வாறு சி.என்.ஆர். ராவ் கருத்து தெரிவித்திருந்தார்.
விஞ்ஞானி சி.என்.ஆர். ராவின் இந்த கருத்து அரசியல்வாதிகளிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.