பீகாரில் மூளைக் காய்ச்சல் பாதிப்பால் 57 பேர் மாண்டனர்.. 49 குழந்தைகளும் பலியானதால் சோகம்
முசாபர்பூர்: பீகார் மாநிலத்தில் மூளைக் காய்ச்சல் பாதிப்பால் மருத்துவமனைகளில் உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 49 ஆக அதிகரித்துள்ளது.
முசாபர்பூரில் கிருஷ்ணா மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 49 குழந்தைகளும், மற்றொரு மருத்துவமனையில் 8 பேரும் இதுவரை மூளைக் காய்ச்சல் பாதிப்பிற்கு பலியாகியுள்ளனர்.
உயிரிழந்த குழந்தைகளில் பெரும்பாலானோருக்கு ரத்தத்தில் குளுக்கோஸ் அளவு குறைவாக இருந்ததாக முசாபர்பூர் மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
ஏராளமான குழந்தைகள் பலியாகியுள்ளதால் பீகார் மாநிலத்தில் நிலைமையை சோதிக்க மத்திய நிபுணர் குழு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இது தவிர மேலும் 133 குழந்தைகள், சிகிச்சைக்காக அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய பீகார் மாநில சுகாதார துறை அமைச்சர் மங்கள் பாண்டே, கடந்த 4 மாதங்களில் மூளைக்காய்ச்சல் அறிகுறிகளுடன் மருத்துவமனைக்கு வந்தவர்களுக்கு சிகிச்சை நடந்து வந்தது. இதில் தற்போது 57 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதில் 49 பேர் குழந்தைகள். மேலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள குழந்தைகளுக்கு, நல்ல தரமான சிகிச்சைகள் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
கடுமையான கோடை வெப்பத்தின் தாக்கத்தால் ஹைபோகிளிசிமியா (Hypoglycemia) என்ற ஒரு வகை மூளைக் காய்ச்சல் மிக அதிகமாக பரவி வருவதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். முசாபர்பூர், கயா ஆகிய மாவட்டங்களில் நோய் தாக்கம் அதிக அளவில் உள்ளது. காய்ச்சல் மற்றும் தலைவலி காரணமாக அனுமதிக்கப்படும் சிறுவர்களை பரிசோதிக்கும் போது தான் மூளைக் காய்ச்சல் பாதிப்பு தெரிய வருகிறது.
இது மூளையில் பாதிப்பை ஏற்படுத்தி வலிப்பு மற்றும் கோமாவை உண்டாக்குவதாகவும், 15 வயதிற்குட்பட்ட குழந்தைகள் இந்த நோயால் அதிகம் பாதிக்கப்படுவதாகவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர். மேலும் சாப்பிடாமல் தூங்கினால் ரத்தத்தில் ஹைபோகிளிசிமியா பரவ வாய்ப்புள்ளதால், பெற்றோர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
தமிழில் பேசக்கூடாதென ரயில்வே உத்தரவு.. கவிதை நடையில் கவிஞர் வைரமுத்து கடும் எச்சரிக்கை
குழந்தைகளுக்கு கடும் காய்ச்சல் இருந்தால் அரசு மருத்துவமனைகளில் உடனடியாக அனுமதிக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏராளமான குழந்தைகள் உயிரிழந்துள்ளதால், சிகிச்சை பெற்று வரும் மற்ற குழந்தைகள் தனி வார்டுகளில் வைக்கப்பட்டுள்ளனர். அங்கு வைத்து மூளைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு அதிதீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை மூலம் மாநிலம் முழுவதுமுள்ள குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மூளைக் காய்ச்சல் பாதிப்பிற்கு பீகாரில் இதுவரை 57 பேர் உயிரிழந்த நிலையில் மேலும் பலர் மூளைக்காய்ச்சல் அறிகுறிகளுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுவதால், மாநிலம் முழுவதும் சுகாதார துறை அதிகாரிகள் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். எனினும் மூளைக்காய்ச்சலை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக, பீகார் மாநில சுகாதார துறை அதிகாரிகள் தகவல் கூறியுள்ளனர்