உங்களை காதலிக்கிறேன்.. நயன்தாரா போட்டோவை காட்டி பீஹாரில் கொள்ளையனை பிடித்த சூப்பர் போலீஸ்!
பீஹாரில் நடிகை நயன்தாராவின் போட்டோவை பயன்படுத்தி பெண் போஸீஸ் ஒருவர் கொள்ளையனை பிடித்த சம்பவம் பாராட்டை பெற்றுள்ளது.
பாட்னா: பீஹாரில் நடிகை நயன்தாராவின் போட்டோவை பயன்படுத்தி பெண் போலீஸ் ஒருவர் கொள்ளையனை பிடித்த சம்பவம் பாராட்டை பெற்றுள்ளது.
பீஹார் தலைநகர் பாட்னாவில் இருந்து 150 கி.மீ., தொலைவில் உள்ள தர்பங்கா மாவட்டத்தை சேர்ந்தவர் சங்கய் குமார் மகடோ. பாஜகவைச் சேர்ந்த இவர் அம்மாநில அமைச்சராக உள்ளார்.
சமீபத்தில் இவரது காஸ்ட்லி செல்போன் காணாமல்போனது. இதுகுறித்து அமைச்சர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
சிக்கிய கொள்ளையன்
மதுபாலா தேவி என்ற பெண் போலீஸ் அதிகாரி காணாமல்போன செல்போன் தொடர்பாக விசாரணை நடத்தினார். மொபைல் போனுக்கு வரும் அழைப்புகளை ட்ராக் செய்த போது அதனை முகமது ஹஸ்னெயின் என்பவர் பயன்படுத்தி வருவது தெரியவந்தது.
தோல்வியடைந்த முயற்சிகள்
இதையடுத்து முகமதுவை பிடிக்க போலீஸார் பலமுறை முயற்சி செய்தனர். ஆனால் கொள்ளையன் போக்கு காட்டியதில் அத்தனை முயற்சியும் தோல்வியில் முடிந்தது.
காதலிப்பதாக கூறிய போலீஸ்
இதையடுத்து எப்படியாவது கொள்ளையனை பிடித்துவிட வேண்டும் என திட்டம் தீட்டிய போலீஸ் அதிகாரி மதுபாலா சாதாரண ஒரு பெண்ணை போல முகமதுவுக்கு போன் செய்தார். மேலும் முகமதுவை காதலிப்பதாகவும் இனிமையாக பேசி நடித்தார் மதுபாலா.
பேசி பேசியே..
ஆரம்பத்தில் இதனை ஏற்க கொள்ளையன் முகமது மறுத்துள்ளார். ஆனால் பேசி பேசியே முகமதுவை தனது வலையில் விழ வைத்தார் அதிகாரி மதுபாலா.
நயன்தாராவின் போட்டோ
காதலியை பார்க்க ஆசைப்பட்ட முகமது அவரது போட்டோவை அனுப்பி வைக்குமாறு கேட்டுள்ளார். இதையடுத்து, மதுபாலா, தான் எனக்கூறி நடிகை நயன்தாராவின் புகைப்படத்தை முகமதுவுக்கு அனுப்பினார். தனது புரோபைலிலும் நயன்தாரா படத்தை வைத்தார்.
மடக்கிப்பிடித்த போலீஸ்
படத்தில் உள்ளது நடிகை என தெரியாமல் அவரது அழகில் சொக்கிப் போன முகமது மதுபால கூறிய இடத்திற்கு சென்றுள்ளார். அங்கு பர்ஹா அணிந்திருந்த மதுபாலா தேவி, மற்றும் மறைந்திருந்த போலீசார் முகமதுவை மடக்கிப் பிடித்து கைது செய்தனர்.
சமயோசிதமாக யோசித்து..
சமயோசிதமாக யோசித்து நடிகை நயன்தாரா போட்டோவை பயன்படுத்தி கொள்ளையனை பிடித்த போலீஸ் அதிகாரி மதுபாலா தேவியை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்..