முதன்முறையாக 27 "எச்டி" கேமராவுடன் குடியரசு தினத்தை லைவாக "கவர்" பண்ணும் டிடி!
டெல்லி: டெல்லியில் நடைபெறும் குடியரசு தினவிழாவை முதன் முறையாக 27 அதிநவீன கேமராக்கள் கொண்டு படம்பிடித்து ஒளிபரப்ப உள்ளது தூர்தர்ஷன்.
நாளை 66வது குடியரசு தினம் கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி டெல்லி ராஜ்பாத்தில் குடியரசு தின அணிவகுப்பு நடைபெற உள்ளது.
ஆண்டுதோறும் குடியரசு தின நிகழ்ச்சிகளை படமெடுத்து, அதனை நேரடியாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பி வருகிறது தூர்தர்ஷன்.
27 அதிநவீன கேமராக்கள்...
அந்தவகையில், இந்தாண்டு 27 அதிநவீன கேமராக்கள் கொண்டு குடியரசு தின நிகழ்ச்சியை படமெடுக்க தூர்தர்ஷன் திட்டமிட்டுள்ளது. இரண்டு ஹைட்ராலிக் லிப்டுக்கள் மற்றும் நான்கு டைனோசர் போன்ற ஜிம்மி ஜிப் கிரைன்கள் மூலம் இந்தியா கேட்டில் நடைபெறும் குடியரசு தின நிகழ்ச்சியும் படமெடுக்கப்பட இருக்கிறதாம்.
நேயர்களுக்காக...
நேரடியாக ஒளிபரப்பப்படும் இந்தக் காட்சிகளை நிச்சயமாக தொலைக்காட்சி நேயர்கள் மிகவும் ரசிப்பார்கள் என தூர்தர்ஷன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பிரித்து பிரித்து...
27 கேமராக்களில் 15, ராஜ்நாத்தில் வைக்கப்படுகிறது. இரண்டு கேமராக்கள் குடியரசுத்தலைவரைப் படமெடுக்க என பிரத்யேகமாகவும், 5 கேமராக்கள் ராஷ்டிரபதி பவனிலும், மீதமுள்ள 7 கேமராக்கள் இந்தியா கேட்டில் படமெடுக்கவும் பயன்படுத்தப்பட உள்ளன.
முதன்முறையாக...
ஜிம்மி ஜிப் போன்ற உபகரணங்கள் குடியரசு தின விழாவில் பயன்படுத்தப்படுவது இதுவே முதன்முறை ஆகும். இது தவிர குடியரசு தின நிகழ்ச்சிகளை துல்லியமாக பதிவு செய்ய பிரத்யேக மைக்குகளும் பயன்படுத்தப்பட உள்ளன.
துல்லியமான பதிவு...
இதன் மூலம், அணிவகுப்பில் பங்கேற்பவர்களின் காலடிச் சத்தத்தைக் கூட துல்லியமாக பதிவு செய்ய முடியும் என்பது அதன் சிறப்பு.
பயிற்சி...
இந்தப் பணிக்கென கடந்த 3 மாதங்களுக்கு முன்னரே சுமார் 100 தூர்தர்ஷன் ஊழியர்கள் பயிற்சியைத் தொடங்கி விட்டார்கள். எனவே, நாளைய குடியரசு தின விழாவை உலகத்தின் வெவ்வேறு பகுதிகளில் இருந்து பார்க்கும் பார்வையாளர்களுக்கு துல்லியமான அதே சமயம் வித்தியாசமான கோணங்களில் காட்சிகளாகக் காட்ட தயாராகி வருகின்றனர்