குஜராத் தேர்தலில் காங்கிரசுக்கு இருக்கும் பெரும் சிக்கல்கள்.. "ஷாக்" ரிப்போர்ட்.. பின்னணி
காந்திநகர்: நடைபெறவுள்ள குஜராத் சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸுக்கு வரலாறு காணாத வீழ்ச்சி காத்துக் கொண்டிருப்பதாக அரசியல் நிபுணர்கள் கணித்துள்ளனர்.
இதுவரை 1990-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல்தான் காங்கிரஸ் சந்தித்த மோசமான தேர்தலாக இருந்தது. அந்த தேர்தலில் மிக சொற்ப வாக்குகளை பெற்று காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது.
ஆனால், இந்த முறை அதைவிட மோசமாக காங்கிரஸ் தோல்வியை சந்திக்கும் என மூத்த பத்திரிகையாளர்களும், அரசியல் நிபுணர்களும் தெரிவிக்கின்றனர்.

வாக்களிக்க தயாரான குஜராத் மக்கள்
இறுதிக்கட்ட பிரச்சாரங்கள் அனைத்தும் முடிவடைந்த நிலையில், வாக்களிப்பதற்கு குஜராத் மக்கள் முழுவீச்சில் தயாராகி வருகின்றனர். இந்த தேர்தலை பொறுத்தவரை வழக்கம் போல பாஜகவுக்கும், காங்கிரஸுக்கும் இடையேதான் போட்டி இருக்கும் என அனைவரும் எண்ணிக் கொண்டிருந்தனர். ஆனால் அதிரடியாக களத்தில் புகுந்து கிட்டத்தட்ட ஆட்டத்தையே கலைத்திருக்கிறது ஆம் ஆத்மி. பாஜகவுக்கு ஒரே போட்டியாக இருந்த காங்கிரஸை பின்னுக்கு தள்ளியதுடன் மட்டுமல்லாமல், பாஜகவுக்கு பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது.

வரலாறு காணாத வீழ்ச்சி
தற்போதைய குஜராத் தேர்தலை பொறுத்தவரை, பாஜகவா, ஆம் ஆத்மியா என்று சொல்லும் அளவுக்கு மாறிவிட்டது. ஆம் ஆத்மியின் விஸ்வரூபத்தில் காங்கிரஸ் கிட்டத்தட்ட மறைந்தே விட்டது. இது ஒருபுறம் இருக்க, காங்கிரஸ் கட்சி இந்த தேர்தலில் இதுவரை சந்திக்காத தோல்வியை எதிர்கொள்ளப் போவதாக அரசியல் பார்வையாளர்கள் தெரிவித்துள்ளனர். ஒருகாலத்தில், குஜராத்தை யாரும் நெருங்க முடியாத கோட்டையாக வைத்திருந்த காங்கிரஸுக்கு ஏன் இந்த நிலைமை வந்தது? இங்கு பார்க்கலாம். குஜராத்தில் காங்கிரஸுக்கு காலம் காலமாக ஜாதிய அரசியல்தான் கைக்கொடுத்து வந்தது. ஷத்திரியர்கள், தலித், பழங்குடியினர், முஸ்லிம் ஆகிய சமூக மக்களின் வாக்குகள் சிந்தாமல் சிதறாமல் காங்கிரஸுக்கு விழுந்து வந்தன. இதுதான் குஜராத்தில் காங்கிரஸை தொடர்ந்து அரியணையில் அமர்த்தியும் வந்தது.

அலட்சியத்துக்கு கிடைத்த பரிசு
பின்னர், பாஜகவின் வருகைக்கு பிறகு மத ரீதியிலான அரசியல் குஜராத்தில் எடுபடத் தொடங்கியது. எனினும், மேற்குறிப்பிட்ட சமூக மக்களின் வாக்குகளை பாஜகவால் பெரிதாக கவர முடியவில்லை. ஆனால், காலம் செல்ல செல்ல, ஷத்திரியர்கள் மற்றும் பழங்குடியினர் சமூக வாக்குகள் பெருமளவு பாஜக பக்கம் வந்தது. எனினும், மீண்டும் அந்த சமூக மக்களை தன் பக்கம் இழுக்க காங்கிரஸ் பெரிய அளவில் ஆர்வம் காட்டவில்லை. இதனால் தொடர்ச்சியாக, அதாவது கடந்த 27 ஆண்டுகளாகவே சிறிது சிறிதாக ஷத்திரியர்கள், பழங்குடியினர் சமூக வாக்குகளை இழக்க தொடங்கியது காங்கிரஸ். உயர் ஜாதி மக்களின் வாக்குகளை கேட்கவே வேண்டாம். அது பாஜகவுக்கு தான் செல்லும். இவ்வாறு தனது மெத்தனப்போக்கால் ஷத்திரியர்கள், கோலி, அஹீர், தாக்குர், தர்பார்ஸ், மல்தாரி, ரபாரி, பர்வார் ஆகிய சமூக வாக்குகள் காங்கிரஸை விட்டு பிரிந்து சென்றன.

ஆட்டத்தை கலைத்த ஆம் ஆத்மி
ஏற்கனவே ஜாதி அரசியல் காங்கிரஸுக்கு பலன் கொடுக்காமல் போக, இடையே புகுந்த ஆம் ஆத்மி, தற்போது ஜாதி அஸ்திரத்தை தான் கையில் எடுத்திருக்கிறது. காங்கிரஸ் மீதான அதிருப்தியால் பிரிந்து சென்ற ஜாதிகளையும், பாஜக மீது கோபத்தில் உள்ள படேல் உள்ள ஜாதிகளையும் தன் பக்கம் திருப்ப ஆம் ஆத்மி முயற்சி செய்தது. ஒவ்வொரு ஜாதி மக்களும் எதற்காக அதிருப்தியில் இருக்கிறார்கள் என தெரிந்துகொண்டு, அவர்களை கவரும் வாக்குறுதிகளை ஆம் ஆத்மி கொடுத்துள்ளது. இதனால் ஒருகாலத்தில், காங்கிரஸுக்கு பின்னால் திரண்டிருந்த ஜாதிகள் இப்போது ஆம் ஆத்மி பக்கம் நிற்கின்றன. இதன் காரணமாக, சவுராஷ்ட்ரா பிராந்தியம், பழங்குடியின பிராந்தியம், மத்திய மற்றும் தெற்கு பிராந்தியங்களில் காங்கிரஸ் கிட்டத்தட்ட கையறு நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது. ஆதலால், தற்போதைய குஜராத் சட்டமன்றத் தேர்தலில் கிட்டத்தட்ட 50 தொகுதிகளில் மூன்றாம் இடத்துக்கு காங்கிரஸ் தள்ளப்படும் என அரசியல் நிபுணர்கள் கணித்துள்ளனர். மேலும், மிக சொற்பமான தொகுதிகளில் மட்டுமே அக்கட்சி வெற்றிபெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications