இனிமேல் யெஸ் சாருக்கு பதில் ஜெய்ஹிந்த் சொல்லுங்க.. குஜராத்தில் பள்ளிகளுக்கு புதிய உத்தரவு
அகமதாபாத்:குஜராத்தில் மாணவர்கள் வருகையைப் பதிவு செய்யும் போது, யெஸ் சார் என்று கூறுவதற்கு பதிலாக ஜெய் ஹிந்த் என கூறுமாறு அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
பொதுவாக பள்ளிகளில் மாணவர்களின் வருகையை பதிவு செய்யும்போது, ஆசிரியர்கள் மாணவர்களின் பெயர்களை சொல்லி அழைப்பர். அப்போது, அவர்கள் தங்களது வருகையை உறுதி செய்ய உள்ளேன் ஐயா என்று பதில் கூறுவது வழக்கம்.
ஆனால் அதை மாற்றி ஜெய்ஹிந்த் அல்லது ஜெய்பாரத் என்று இனிமேல் கூறவேண்டும் என்று குஜராத் பள்ளிகளுக்கு மாநில அரசு கட்டாய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அந்த உத்தரவானது ஜனவரி 1ம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் கூறியுள்ளது.
குஜராத்தில் கல்வி அமைச்சகம் நடத்திய ஆய்வு கூட்டத்தின் முடிவில் இந்த புதிய உத்தரவு பிறப்பிக்க முடிவானது. இதனை தொடர்ந்து குஜராத் முதன்மை கல்வி இயக்ககம் மற்றும் குஜராத் மேனிலைப்பள்ளி கல்வி வாரியம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.
அதன்படி, ஒன்று முதல் 12 ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவிகள் ஜனவரி 1 ம் தேதி முதல் ஜெய்ஹிந்த் அல்லது ஜெய்பாரத் என்றே சொல்ல வேண்டும். இந்த உத்தரவை அனைத்துப் பள்ளிகளும் பின்பற்றுவதை உறுதிப்படுத்துமாறு மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.