ஜம்முவில் இன்று தியாகிகள் நினைவு தினம்.. முன்னெச்சரிக்கையாக நிறுத்தப்பட்ட அமர்நாத் யாத்திரை
ஜம்மு: ஜூலை 13-ம் தேதியான இன்று ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தியாகிகள் தினம் அனுசரிக்கப்பட்டு வருவதால், அமர்நாத் யாத்திரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
கடந்த 1-ம் தேதி முதல் 2019-ம் ஆண்டுக்கான அமர்நாத் யாத்திரை துவங்கியது. 46 நாட்கள் நடைபெறும் இந்த யாத்திரையில் பங்கேற்க 1.75 லட்சம் பேர் பதிவு செய்துள்ளனர்.
கடந்த 12 நாட்களில் சுமார் ஒன்றரை லட்சம் பேர் வரை அமர்நாத் பனிலிங்க தரிசனத்தை முடித்துள்ளனர். இந்நிலையில் யாத்திரை துவங்கி 12 நாட்கள் முடிந்துள்ள நிலையில், இன்று யாத்திரையானது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதற்கு காரணம் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தியாகிகள் தினம் அனுசரிக்கப்படுவது தான். கடந்த 1931-ம் ஆண்டு இதே ஜூலை 13-ம் தேதி காஷ்மீரை ஆட்சி செய்த டோக்ரா ஆட்சியாளர்களுக்கு எதிராக குரல் கொடுத்த, அப்துல் காதீர் என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர் அரசு படையினர்.
இதனை கண்டித்ததும் அவரை விடுதலை செய்ய கோரியும், அப்துல் காதீர் அடைக்கப்பட்ட சிறைக்கு வெளியே ஏராளமான மக்கள் ஒன்று கூடி போராட்டம் நடத்தினர். இதனையடுத்து ஆத்திரமடைந்த அரசு படையினர், துப்பாக்கி தோட்டாக்களால் மக்களை துளைத்தெடுத்தனர். இதில் சுமார் 22 அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்தனர்.
இந்த கொடூர சம்பவத்தை நினைவுகூரும் வகையில், ஆண்டுதோறும் ஜூலை 13-ம் தேதி காஷ்மீரில் தியாகிகள் தினம் அனுசரிக்கப்படுவது வழக்கம். இதனையொட்டி ஜம்மு காஷ்மீர் மாநிலம் முழுவதும் போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
தியாகிகள் தினத்தையொட்டி காஷ்மீர் பள்ளத்தாக்கில் பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நிகழாமல் இருக்க, ஜம்முவில் இருந்து செல்லும் அமர்நாத் யாத்திரை முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
நிலைமை சீராக உள்ளதாக தகவல் வந்த பிறகு, உயரதிகாரிகள் உத்தரவிட்ட பின்னர் மீண்டும் அமர்நாத் யாத்திரை துவங்கும் என கூறப்பட்டுள்ளது. யாத்திரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால், ஜம்முவின் பகவதி நகரில் முகாமிட்டுள்ள யாத்ரீகர்கள் யாரும் தங்களது பயணத்தை தொடரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.