கேரளாவிலும் 30 கிறிஸ்தவர்கள் மதமாற்றம்.. உதவி செய்ததாக கூறுகிறது வி.எச்.பி.
ஆலப்புழா/திருவனந்தபுரம்: நாடு முழுவதும் பல பகுதிகளில் விஸ்வ இந்து பரிஷத் பிற மதத்தினரை இந்து மதத்திற்கு மாற்றும் வேலையில் இறங்கியுள்ளது. இது சர்ச்சையைக் கிளப்பியுள்ள நிலையில் கேரளாவில் 30 கிறிஸ்தவர்கள் இந்துக்களாக மாற உதவி செய்ததாக வி.எச்.பி கூறியுள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து விசாரணை நடத்தக கேரள அரசு உத்தரவிட்டுள்ளது.
ஆலப்புழாவைச் சேர்ந்த 8 குடும்பங்களைச் சேர்ந்த 30 பேர் கிறிஸ்தவ மதத்திலிருந்து இந்து மதத்திற்கு மாறியதாக கூறப்படுகிறது. இந்த 30 பேரும் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள். இவர்கள் அனைவரும் ஞாயிற்றுக்கிழமையன்று, கனிச்சன்னல்லூர் என்ற இடத்தில் உள்ள கோவிலில் வைத்து மதமாற்றம் புரிந்துள்ளனர்.
இந்த விவகாரம் குறித்து மாநில போலீஸ் துறை அமைச்சர் ரமேஷ் சென்னிதலா கூறுகையில், இதுதொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யுமாறு கூடுதல் டிஜிபி ஹேமச்சந்திரனுக்கு நான் உத்தரவிட்டுள்ளேன். இதுகுறித்து அவர் விசாரணை நடத்துவார். இதில் சட்ட மீறல் இருக்கிறதா என்பதை ஆராய்வார் என்றார்.
இதுதொடர்பாக உள்ளூர் வி.எச்.பி. தலைவர் பிரதாப் படிக்கல் கூறுகையில், அனைவரும் சொந்த விருப்பத்தின் பேரிலேயே மதம் மாறினர். நாங்கள் அதற்குத் தேவையான உதவிகளை மட்டுமே செய்து கொடுத்தோம். மேலும் 150 பேர் மதம் மாற விருப்பம் தெரிவித்துள்ளனர். அவர்களுக்கும் தேவையான உதவிகளை வி.எச்.பி. செய்யும். கிறிஸ்துமஸ் தினத்தன்று இந்த நிகழ்ச்சி நடைபெறும் என்றார் அவர்.
ஏற்கனவே ஆக்ராவில் 57 கிறிஸ்தவர்கள் மதமாற்றம் செய்யப்பட்டனர். குஜராத்தில் நேற்று பெரிய அளவிலான மதமாற்றம் நடைபெற்றது. இந்த நிலையில் கேரளாவிலும் அது பரவியுள்ளது குறிப்பிடத்தக்கது.