கேரளாவில் காங். ஆதரவுடன் கிராம பஞ்சாயத்து தலைவர் பதவியை கைப்பற்றிய அதிமுக
இடுக்கி: கேரளாவில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி ஆதரவுடன் இடுக்கியில் ஒரு கிராம பஞ்சாயத்து தலைவர் பதவியை அதிமுக கைப்பற்றியுள்ளது.
லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் பாஜகவுடன் அதிமுக இணைந்து தேர்தலை எதிர்கொண்டது. ஆனால் அண்மையில் நடைபெற்ற தேர்தலில் அதிமுக- பாஜக உறவு ஒட்டாத ஒன்றாக இருந்து வருகிறது.
அதே நேரத்தில் திமுக தலைமையிலான அணியில் காங்கிரஸ் இடம்பெற்றிருக்கிறது. கேரளாவில் அரசியல் நிலவரம் வேறாக உள்ளது.
அம்மாநிலத்தில் தமிழர்கள் அதிகம் வாழும் இடுக்கி மாவட்டத்தில் பீருமடே கிராம பஞ்சாயத்து தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணியுடன் கை கோர்த்து இடதுசாரிகள் முன்னணியை எதிர்த்து போட்டியிட்டது அதிமுக.
பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு அதிமுக சார்பில் மேல்மலை வார்டு உறுப்பினர் எஸ். பிரவீனா போட்டியிட்டார். இடதுசாரிகள் சார்பில் ரஜனி வினோத் போட்டியிட்டார். இத்தேர்தலில் அதிமுகவின் பிரவீனா ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று கிராம பஞ்சாயத்து தலைவரானார்.
கேரளாவில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி உதவியுடன் முதல் முறையாக கிராம பஞ்சாயத்து தலைவர் பதவியை அதிமுக கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது. இப்பஞ்சாயத்து கவுன்சிலில் இடதுசாரி முன்னணிக்கு 7 உறுப்பினர்களும் காங்கிரஸின் ஐக்கிய ஜனநயக முன்னணிக்கு 7 உறுப்பினர்களும் 1 அதிமுக உறுப்பினரும் உள்ளனர். 2 காங்கிரஸ் உறுப்பினர்கள் சிபிஎம்-க்கு தாவியதால் அவர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர்.