ஓப்பனிங் முதல் பினிஷிங்வரை.. லாலு-நிதீஷ் பஞ்சாயத்தை தீர்த்துவைத்த 'திமுக' பிரசாந்த் கிஷோர்!
பாட்னா: லாலு பிரசாத்தின் ராஷ்டிரிய ஜனதாதள கட்சியுடன் இணைந்து ஆட்சிக்கு வந்துள்ள ஐக்கிய ஜனதாதள கட்சியின் தலைவரும், முதல்வருமான நிதீஷ்குமார் பெரும் நெருக்கடிக்கு நடுவே, சுந்திரமற்று ஆட்சி செலுத்தும் நிலையிலுள்ளார்.
கடந்த 8 வருடங்களாக ஐக்கிய ஜனதாதளம்-பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்ற நிலையில், முதல்வராக பதவி வகித்த நிதீஷ்குமார் எந்த பிரச்சினையும், நெருக்கடியுமின்றி, ஆட்சி நடத்தினார்.
மோடியை பிரதமர் வேட்பாளராக பாஜக அறிவித்ததால், நிதீஷ்குமார், பாஜக கூட்டணியைவிட்டு பிரிந்து சென்றுவிட்டார். இதனால் தொடக்கம் முதல் நேருக்கு நேர் மோதிக்கொண்ட லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதாதள கட்சியுடன், கூட்டணி வைத்தார் நிதீஷ்.
லாலு வசம்
பீகார் சட்டசபை தேர்தலில் லாலு-நிதீஷ் கட்சிகள், காங்கிரசையும் இணைந்து மெகா கூட்டணி அமைத்து பாஜகவை தோற்கடித்துவிட்டன. நேற்று புதிய அமைச்சரவை பதவியேற்பு விழா நடந்தது. நிதீஷ்குமார் முதல்வராக பதவி வகித்தாலும், முக்கிய துறைகளை லாலு, லாபி செய்து தனது கட்சிக்காக பெற்றுவிட்டார்.
துணை முதல்வர்
முதல்வர் நிதீஷ்குமார் பதவியின் முக்கியத்துவத்தை குறைக்கும் வகையில் துணை முதல்வர் பதவி உருவாக்கப்பட்டு, லாலுவின் இளைய மகனும், 9ம் வகுப்பு கூட தாண்டாதவருமான, தேஜஸ் யாதவ் அந்த பதவியில் அமர்த்தப்பட்டுள்ளார்.
மூத்த மகன்
அதுமட்டுமில்லாமல், லாலுவின் மூத்த மகன் தேஜ் பிரதாப்புக்கும் கேபினட்டில் இடம் கிடைத்துள்ளது. முக்கிய துறைகளான சுகாதாரம், சிறிய நீர்பாசனம், வனம் மற்றும் சுற்றுச்சூழல் ஆகிய துறைகள் அவருக்கு வழங்கப்பட்டுள்ளன.
நிதீஷ் பேச்சு எடுபடவில்லை
லாலுவின் ஒரு மகனுக்கு கேபினட் அந்தஸ்து கொடுப்பதுதான் சரியாக இருக்கும் என்று நிதீஷ் கூறியதாகவும், ஆனால், லாலு கட்டாயப்படுத்தி இரு மகன்களுக்கும் பதவி பெற்றுக்கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதில் தேஜ் பிரதாப், தாய் ராப்ரி தேவியின் செல்லமகன் என்பதும், லாபி பலம்பெற முக்கிய காரணமாகும்.
லாலுவுக்கு சம உரிமை
அமைச்சரவையில் ஐக்கிய ஜனதாதளத்திற்கு ஈடாக (முதல்வர் பதவியை தவிர்த்து) 12 கேபினட் பதவிகள் லாலு கட்சிக்கும் தரப்பட்டுள்ளது. இது ஐக்கிய ஜனதாதள கட்சியினருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அதேநேரம், தேர்தலில், லாலு கட்சி 80 தொகுதிகளிலும், நிதீஷ் கட்சி 71 இடங்களிலும்தான் வெற்றி பெற்றது என்பதால், லாலு பேரம் வலுவாக பேசியதாக கூறப்படுகிறது.
காவல்துறை நிதீஷ் வசம்
அதேநேரம், ஐக்கிய ஜனதாதள கட்சிக்கு, ஒரு ஆறுதல் என்னவென்றால், காவல்துறையை கட்டுப்படுத்தும் உள்துறையை, தனது கட்டுப்பாட்டிலேயே வைத்துள்ளார் முதல்வர் நிதீஷ். லாலு, ராப்ரி தேவி ஆட்சி காலங்களில், பீகாரில் காட்டாட்சி நடந்தது. அதிகாரிகளுக்கே பாதுகாப்பில்லா நிலை இருந்தது. பாஜக-ஐக்கிய ஜனதாதள கூட்டணியில்தான் அங்கு சட்டம்-ஒழுங்கு கட்டுப்பாட்டில் வந்தது. காவல்துறை தற்போது லாலு பக்கம் போகாமல் இருப்பதால் மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.
ஜஸ்ட் மிஸ்
இந்த பேரத்தில், நிதீஷுக்கு கிடைத்த ஒரு முக்கிய வெற்றி, தனது கட்சிக்காரரான, விஜய்குமார் சவுத்ரிக்கு சபாநாயகர் பதவியை பெற்றுக்கொடுத்ததுதான். சபாநாயகர் பதவியும், லாலு கட்சிபக்கம் போயிருந்தால், மொத்த குடுமியும், லாலு கைக்கு போயிருக்கும். ஆனால், நிதீஷ் ஜஸ்ட் மிஸ் என்ற வகையில் தப்பினார். முக்கிய துறைகளை பெறும் படபடப்பில், சபாநாயகர் பதவியைவிட்டுத்தர லாலு தயாராகிவிட்டார்.
திமுக வல்லுநர்
மக்களவை தேர்தலில் மோடிக்கும், பீகார் தேர்தலில் நிதீஷுக்கும் பிரச்சார யுக்திகளை முன்னெடுத்து கொண்டு சென்றவர் டிஜிட்டல் வல்லுநரான பிரசாந்த் கிஷோர். இவர் வரும் தமிழக சட்டசபை தேர்தலில் திமுகவுக்காக பணியாற்ற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. இந்நிலையில், கேபினட் துறை ஒதுக்கீடு தொடர்பாக நிதீஷ்-லாலு நடுவே நிலவிய மோதலை நிதீஷ்தான் தலையிட்டு சமரசம் செய்துவைத்தாராம். பிரச்சாரம் முதல் முடியும் வரை கிஷோர் பங்களிப்பு அதிகம் என்கிறது பீகார் வட்டாரம்.