காப்பாத்துங்க! 40 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த 5 வயது சிறுவன்! சுரங்கம் தோண்டி பத்திரமாக மீட்பு
போபால்: மத்திய பிரதேசத்தில் 40 அடி ஆழம் கொண்ட ஆழ்துளை கிணற்றில் விழுந்த 5 வயது சிறுவன் 10 மணி நேர போராட்டத்துக்கு பிறகு சுரங்கம் தோண்டி பத்திரமாக மீட்கப்பட்டான்.
மத்திய பிரதேச மாநிலம் சத்தார்பூர் மாவட்டம் நாராயண்புரா பதர்பூர் அருகே உள்ள நாராயணபுரா கிராமத்தை சேர்ந்தவன் திபேந்திரயாதவ் (வயது 5).
இவன் தனது குடும்பத்தினருடன் அந்தபகுதியில் உள்ள வயலுக்கு சென்றார். குடும்பத்தினர் வயலில் வேலை செய்தபோது சிறுவன் விளையாடி கொண்டிருந்தான்.
8 மணி நேர திக்திக் போராட்டம்.. உபியில் 180 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த.. 4 வயது சிறுவன் மீட்பு
ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன்
அப்போது அங்கு திறந்து கிடந்த 40 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் சிறுவன் தவறி விழுந்தான். சிறுவனை காணவில்லை என குடும்பத்தினர் தேடினர். அப்போது ஆழ்துளை கிணற்றில் இருந்து சத்தம் கேட்டது. அப்போதுதான் சிறுவன் ஆழ்துளை கிணற்றில் விழுந்தது தெரிந்தது. இதனால் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.
காப்பாற்றும்படி அழுத சிறுவன்
இதையடுத்து அவர்கள் சிறுவனிடம் பேசினர். அவனும் காப்பாற்றும்படி அழுதான். இதை கேட்ட அவர்கள் உடனடியாக போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். மேலும், தேசிய பேரிடர் மீட்பு படை, மாநில பேரிடர் மீட்பு படையினர் அங்கு வந்தனர். இவர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
ஆக்சிஜன் வழங்கல்
முதற்கட்டமாக சிலிண்டர் மூலம் சிறுவனுக்கு குழாய் மூலம் ஆக்சிஜன் வழங்கப்பட்டது. இதையடுத்து, ஆழ்துளை கிணற்றின் பக்கவாட்டில் ஜேசிபி வாகனம் மூலம் சுரங்கம் தோண்டப்பட்டது. மேலும் சிறுவனின் செயல்பாட்டை மீட்பு குழுவினர் கேமரா மூலம் கண்காணித்து வந்தனர். 25 அடி ஆழத்தில் சிறுவன் சிக்கி உயிருக்கு போராடுவது தெரியவந்தது.
சுரங்கம் தோண்டி மீட்பு
இதையடுத்து 25 அடி ஆழத்துக்கு பக்கவாட்டில் பள்ளம் தோண்டி அதில் இருந்து ஆழ்துளை கிணற்றுக்கு சுரங்கம் தோண்டி சுமார் 10 மணி நேர போராட்டத்துக்கு பிறகு சிறுவனை மீட்பு படையினர் உயிருடன் மீட்டனர். இதையடுத்து சிறுவனின் பெற்றோர் குடும்பத்தினர் கண்ணீர் மல்க மீட்பு படையினருக்கு நன்றி தெரிவித்தனர்.
மருத்துவமனையில் சிகிச்சை
மீட்கப்பட்ட சிறுவன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தை தொடர்ந்து மாநிலத்தில் பயன்படாமல் உள்ள ஆழ்துளை கிணற்றை மூட வேண்டும் என்ற பிரசாரம் துவங்கி உள்ளது. இதற்கிடையே மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் வீடியோ கால் மூலம் சிறுவனுடன் உரையாடி ஊக்கப்படுத்தினார்.