ம.பி.யில் மூட நம்பிக்கையின் உச்சக்கட்டம்... கொரோனாவை விரட்ட தீப்பந்தம் ஏந்திய கிராம மக்கள்..!
போபால்: மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில் கொரோனாவை ஓடக் கூறி பொதுமக்கள் தீப்பந்தத்துடன் ஓடிய நிகழ்வு நடந்துள்ளது.
கொரோனாவை ஒழிக்கும் பணிகளில் உலக நாடுகள் முழுவதும் அறிவியல் ரீதியான முயற்சிகளை முன்னெடுத்து வரும் சூழலில், இப்படிப்பட்ட நிகழ்வுகளும் ஆங்காங்கு நடந்து கொண்டு தான் இருக்கின்றன.
கொரோனா என்பதை தீயசக்தியாக கருதும் அந்த கிராமமக்கள், நெருப்பைக் கொண்டு அதனை விரட்ட முடியும் என்ற நம்பிக்கையில் இவ்வாறு செய்துள்ளனர்.
ஆக்சிஜன் பற்றாக்குறை: மகாராஷ்டிராவுக்கு விரைந்த'ஆக்ஸிஜன் எக்ஸ்பிரஸ்’ ரயில்.. தட்டுப்பாடு தீருமா?
தீப்பந்தம்
நாடு முழுவதும் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருவதால் அதனை தடுக்கும் பணிகளில் மத்திய மாநில அரசுகளே திணறி வருகின்றன. இந்தச்சூழலில், மத்தியப் பிரதேசம் மாநிலம் அஹர் மால்வா மாவட்டத்தில் உள்ள கணேஷ்புரா என்ற கிராமத்தில் தீப்பந்தத்தை கொண்டு கொரோனாவை விரட்டும் கூத்து அரங்கேறியுள்ளது.
முழக்கம்
வாரத்துக்கு இரண்டு நாட்கள் வீதம் இரவு நேரங்களில் தீப்பந்தத்தை கைகளில் எடுக்கும் கணேஷ்புரா கிராமமக்கள், 'ஓடு கொரோனா ஓடு' என்ற முழக்கத்துடன் ஊரைச் சுற்றி வருகின்றனர். குடும்பத்தில் ஒருவர் இந்த நிகழ்வில் பங்கேற்க வேண்டும் என்பது அந்தக் கிராமத்தின் கட்டுப்பாடு. ஊரை ஒரு சுற்று சுற்றி வந்ததும் கைகளில் வைத்துள்ள தீப்பந்தங்களை ஊரின் எல்லையில் தூக்கி விசிவிடுகின்றனர்.
விழிப்புணர்வு
இவ்வாறு செய்வதன் மூலம் கொரோனா வைரஸ் தங்கள் ஊருக்குள் நுழையாது என்பது அந்த ஊர் மக்களின் நம்பிக்கையாக (?) உள்ளது. கொரோனாவின் தீவிரமும், அது பரவும் விதமும் பற்றிய விழிப்புணர்வு இன்னும் முழுமையாக மக்கள் மத்தியில் சென்று சேரவில்லை என்பதற்கு இது போன்ற நிகழ்வுகளே உதாரணம்.
மத்திய அமைச்சர்
கடந்தாண்டு கொரோனாவின் முதலாவது அலை வந்த போது மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே ''கோ கொரொனா கோ கொரொனா'' தனது வீட்டின் முன்பு நின்று முழங்கியது குறிப்பிடத்தக்கது. இதனிடையே ம.பி.யில் நடந்துள்ள இந்த நிகழ்வு சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதுடன் அது குறித்த விவாதத்தையும் உருவாக்கியுள்ளது.