நடைப் பயிற்சி... மும்பையை பின்னுக்குத் தள்ளிய டெல்லி!
டெல்லி: மும்பை நகர மக்களை விட அதிக எண்ணிக்கையில் டெல்லியில் மக்கள் நடைப் பயிற்சி மேற்கொள்வதாக சமீபத்திய கணக்கெடுப்பு ஒன்றின் மூலம் தெரிய வந்துள்ளது.
மாக்ஸ் பூபா என்ற நிறுவனம் டெல்லி மற்றும் மும்பையில் நடைபயிற்சி செய்வோர் குறித்த ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. பெருநகரங்களில் வசிக்கும் மக்கள் நடைப்பயிற்சி மேற்கொள்ள காரணம் என்ன?, அவர்கள் எவ்வளவு நேரம் நடைப்பயிற்சி மேற்கொள்கிறார்கள்?, நடைப்பயிற்சி செய்யும் போது அவர்கள் வேறு என்ன செய்கிறார்கள் போன்ற கேள்விகளுக்கு விடை காணும் விதமாக இந்த ஆய்வு நடத்தப்பட்டது.
இதற்காக டெல்லி மற்றும் மும்பையில் தலா 1000 மக்களிடம் மாக்ஸ் பூபா சார்பாக கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்த ஆய்வின் முடிவில் மும்பையை விட டெல்லியில் அதிக எண்ணிக்கையில் மக்கள் நடைபயிற்சி மேற்கொள்வது தெரிய வந்துள்ளது.
இந்த கணக்கெடுப்பின் முடிவுகள் சில...
ரொம்ப சந்தோஷம்...
டெல்லியில் 56% மக்கள் ஒழுங்காக நடைப்பயிற்சி செய்ய துவங்கிய பின் தாங்கள் மகிழ்ச்சியாக உணர்வதாக தெரிவித்துள்ளனர். மும்பையில் 46% மக்கள் மட்டும் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
நடக்கவே விருப்பம்...
நடைப்பயிற்சி மேற்கொள்ள ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு வாகனத்தில் செல்வதை விட அருகே உள்ள குறுகிய தூரத்தில் நடக்கவே விருப்பம் என டெல்லியில் 45% மக்களும், மும்பையில் 32% மக்களும் கூறியுள்ளனர்.
சரியான நேரம்...
தவறாமல் நடைப்பயிற்சி மேற்கொள்வதற்காக என அலுவலகத்திலிருந்து சரியான நேரத்தில் திரும்புவதாக 36% டெல்லி மக்களும், மும்பையில் 26% மக்களும் இந்த கணக்கெடுப்பில் தெரிவித்துள்ளனர்.
கூடுதல் நேரம்...
ஒரு வாரத்திற்கு மும்பை மக்களின் சராசரி நடைப்பயிற்சி நேரம் 48 நிமிடங்களாக உள்ள நிலையில், டெல்லி மக்கள் வாரத்திற்கு சராசரியாக 35 நிமிடங்கள் நடக்கின்றனர்.
குடும்பமா... நண்பர்களா...
56% டெல்லி மக்கள் குடும்பத்தினரோடு நடைப்பயிற்சி செல்ல விருப்பம் தெரிவித்துள்ள நிலையில், 50 சதவீத மும்பை மக்கள் நண்பர்களோடு செல்வதை விரும்புகின்றனர்.
நேர்மறை மாற்றத்திற்கு உதவும்...
இந்தக் கணக்கெடுப்பு குறித்து மாக்ஸ் பூபா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மனசிஜி மிஸ்ரா கூறுகையில், ‘டெல்லி, மும்பை ஆகிய இரு மாநகர மக்களும் மன உளைச்சல், நாள்பட்ட நோய் போன்றவற்றால் அவதிப்படுகிறார்கள். இவர்களின் வாழ்க்கை முறையின் நேர்மறை மாற்றத்திற்கு உதவிபுரியும் நடைப்பயிற்சி பழக்கம், மக்களின் உற்பத்தித் திறனை மேம்படுத்த உதவுகிறது' எனத் தெரிவித்துள்ளார்.