தாயில்லாத குழந்தைகளுக்கு தந்தை தான் பாதுகாவலர்: ஹைகோர்ட் உத்தரவு
மும்பை: ஈன்ற தாய் இல்லாத பட்சத்தில் தந்தை தான் குழந்தையின் இயற்கையான பாதுகாவலர் என முக்கியத் தீர்ப்பொன்றை மும்பை ஹைகோர்ட் வழங்கியுள்ளது.
மராட்டிய மாநிலம் சதாரா மாவட்டத்தை சேர்ந்த அமோல் பவார் என்பவருக்கும், ரமேஷ் தோத்ரே என்பவரின் மகளுக்கும் கடந்த 2010-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியினருக்கு இரண்டரை வயதில் ஆண் குழந்தை ஒன்று உள்ளது.
இந்நிலையில், உடலில் தீக்காயங்களுடன் மருத்துவனையில் அனுமதிக்கப் பட்டு சிகிச்சைப் பலனின்றி பலியானார் அமோலின் மனைவி. அவரின் மர்ம மரணம் தொடர்பாக போலீசார் அமோலைக் கைது செய்தனர். அவரது வழக்கை விசாரித்த சதாரா செசன்சு கோர்ட் அமோலை விடுதலை செய்தது.
இதற்கிடையே, அமோல் பவாரின் மகன், அவரது மனைவியின் தந்தையான ரமேஷ் தோத்ரேவின் பராமரிப்பில் வளர்ந்து வந்தான். விடுதலையானதைத் தொடர்ந்து தனது மகனை மீண்டும் தன்னிடம் ஒப்படைக்க கோரி அமோல் பவார், மும்பை ஹைகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
அமோலின் மனுவை விசாரித்த நீதிபதிகள் ஹரிதாஸ் மற்றும் கத்காரி, ‘‘தாய் இல்லாத நிலையில், தந்தை தான் குழந்தையின் இயற்கையான பாதுகாவலர்'' எனத் தீர்ப்பளித்துள்ளனர். மேலும், அமோலின் இரண்டரை வயது மகனை மீண்டும் அவரிடமே ஒப்படைக்க கோர்ட் உத்தரவிட்டுள்ளது.