ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் சேர விரும்பி, பின் மனம் மாறி இந்தியா திரும்பிய 18 வயது பெண்!
ஹைதராபாத்: ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் பால் ஈர்ப்பு ஏற்பட்டு அந்த அமைப்பில் சேர நினைத்து பின்னர் தனது முடிவை மாற்றிக் கொண்டு இந்தியா திரும்பியுள்ளார் 18 வயதான ஹைதராபாத் பெண்.
இந்தப் பெண் கத்தார் நாட்டின் தோஹா நகரில் வசித்து வந்தார். இவருக்கு ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் மீது ஈர்ப்பு ஏற்பட்டுள்ளது. ஆன்லைன் மூலமாக இவர் அந்த அமைப்பின் மீது ஆர்வம் கொண்டார். இதையடுத்து அதில் சேர முடிவு செய்தார். அவருடன் அவருக்குப் பக்கத்து வீ்ட்டில் வசித்து வந்த ஒரு பெண்ணும் சேர முடிவெடுத்தார்.
இந்த நிலையில் ஹைதராபாத் பெண்ணின் மனதில் கடைசி நேரத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. தனது முடிவை கைவிட்டார். மேலும் தாயகம் திரும்பி விட முடிவு செய்து ஹைதராபாத்துக்குப் புறப்பட்டு விட்டார். தற்போது அவர் தனது பெற்றோருடன் சேர்துள்ளார் என்று ஹைதராபாத் மாநகர காவல்துறை ஆணையர் மகேந்திர ரெட்டி கூறியுள்ளார்.
தானாகவே மனம் திருந்தி அந்தப் பெண் வந்துள்ளதாகவும், போலீஸ் தரப்பில் எந்த கவுன்சிலிங்கும் கொடுக்கப்படவில்லை என்றும் மகேந்திர ரெட்டி கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், 2 மாதங்களுக்கு முன்பு அவருக்கு ஐஎஸ் அமைப்பில் சேர வேண்டும் என்று தோன்றியுள்ளது. ஆனால் அவரே பின்னர் மனம் மாறியுள்ளார். இதையடுத்து தாயகம் திரும்ப முடிவெடுத்தார். இதையடுத்து போலீஸ் தரப்பில் அவர் நாடு திரும்ப உதவி செய்யப்பட்டது. தற்போது அவர் திரும்பி வந்து விட்டார். பெற்றோருடன் இணைந்துள்ளார் என்றார் ரெட்டி.
அவர் தீவிரவாத அமைப்பில் சேர்வில்லை என்பதாலும், தீவிரவாதிகள் யாருடனும் தொடர்பு வைத்திருக்கவில்லை என்பதாலும் அவர் மீது வழக்குப் போடவில்லை என்றும் அவர் வீட்டுக் காவலில் வைக்கப்படவில்லை என்றும் போலீஸார் கூறியுள்ளனர்.
இருப்பினும் தங்களது மகளுக்கு கவுன்சிலிங் தருமாறு பெற்றோர் தரப்பில் காவல்துறையை அணுகியுள்ளதாக ரெட்டி கூறியுள்ளார்.