நீரில் மூழ்கவிருந்த 4 சிறுவர்களை டர்பனை போட்டு காப்பாற்றிய 2 சீக்கியர்கள்
சங்பூர்: பஞ்சாப் மாநிலத்தில் விநாயகர் சிலைகளை கால்வாயில் கரைக்கையில் நீரில் தவறி விழுந்த 4 சிறுவர்களை தங்களின் டர்பனை போட்டு 2 சீக்கிய வாலிபர்கள் காப்பாற்றியுள்ளனர்.
பஞ்சாப் மாநிலத்தில் உள்ள சூலர் காட் கால்வாயில் விநாயகர் சிலைகளை கரைக்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அப்போது சில சிறுவர்கள் கால்வாயில் நீர் அதிகம் இல்லாத பகுதியில் இறங்கி சிலைகளை கரைக்க முயன்றுள்ளனர்.
அப்போது திடீர் என்று அங்கு நீரின் வரத்து அதிகரித்துள்ளது. அதிக அளவில் பாய்ந்து வந்த நீர் சிலைகளை கரைத்துக் கொண்டிருந்த 4 சிறுவர்களை அடித்துச் சென்றது. கால்வாயின் ஒரு கரையோரம் அமர்ந்து சிலை கரைப்பை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த இந்தர்பால் சிங் என்பவர் தனது டர்பனை கழற்றி அதன் ஒரு முனையை ஆற்றில் வீசி சிறுவர்களை காப்பாற்றினார்.
மேலும் மறு கரையோரம் இருந்த கன்வல்ஜித் சிங் என்பவரும் தனது டர்பனை போட்டு சிறுவர்களை காப்பாற்றினார். இதை அங்கிருந்த ஒருவர் தனது செல்போனில் வீடியோ எடுத்து அதை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்.
சீக்கியர்கள் வீட்டில் இருக்கையில் அதுவும் குளிக்கையில் மட்டுமே டர்பனை கழற்ற வேண்டும். அப்படி இருக்கையில் விதிமுறையை மீறி இந்தர்பால் மற்றும் கன்வல்ஜித் பொது இடத்தில் டர்பனை கழற்றி நான்கு பேரின் உயிரை காப்பாற்றியுள்ளனர்.