ராஜபக்சேவின் தோல்வி... மகிழ்ச்சியில் டெல்லி... சிறிசேன- ரணிலிடம் நிறையவே எதிர்பார்ப்பு!
டெல்லி: இலங்கையின் பிரதமராக மகிந்த ராஜபக்சே வரமுடியாமல் போனதை டெல்லிதான் புன்னகையோடு ரசித்துக் கொண்டிருக்கிறது.. அதே நேரத்தில் அதிபர் மைத்ரிபால சிறிசேன, புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவிடம் கூடுதல் எதிர்பார்ப்புகளுடன் காத்துக் கொண்டிருக்கிறது மத்திய அரசு.
கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற இலங்கை அதிபர் தேர்தலில் மகிந்த ராஜபக்சே படுதோல்வி அடைந்தார். இத்தேர்தல் தோல்விக்கு இந்தியாவின் வெளிநாட்டு கொள்கை வகுப்பு அமைப்பான 'ரா'தான் காரணம் என்று பகிரங்கமாக குற்றம்சாட்டியவர் மகிந்த ராஜபக்சே.
ஆனால் ராஜபக்சேவின் இந்த குற்றச்சாட்டுகளை ரா அதிகாரிகள் மறுத்திருந்தனர். மேலும் இலங்கையின் புதிய பிரதமராக ரணில் வர வேண்டும் என்ற விருப்பத்தையும் மத்திய அரசு வெளிப்படுத்தியிருந்தது. ராஜபக்சே மீண்டும் அதிகாரத்துக்கு வருவதை இந்தியா முற்று முழுதாகவே விரும்பவில்லை.
ராஜபக்சே மீது அதிருப்தி
மகிந்த ராஜபக்சே ஆட்சிக் காலத்தின் கடைசி கட்டங்களில் இந்தியாவுடனான உறவை அவரே சீர்குலைத்துக் கொண்டார். தமிழர் பிரச்சனையாகட்டும்.. சீனாவுடனான நெருக்கம் காட்டியதாகட்டும்.. ராஜபக்சேவின் நடவடிக்கைகளால் இந்தியா அதிருப்தி அடைந்தது. அதனால்தான் தமிழர் பிரச்சனைக்கு தீர்வு காண ராஜபக்சே தவறிவிட்டதாக இந்தியா குற்றம்சாட்டியது.
சீனா நீர்மூழ்கிக் கப்பல்
இந்தியாவின் அதிருப்திக்கு எதிர்ப்பு காட்டும் வகையில் இலங்கையில் சீனாவின் நீர்மூழ்கிக் கப்பலை நிறுத்துவதற்கு ராஜபக்சே அனுமதி கொடுத்தார். இதனை ராஜபக்சேவிடம் நேரடியாக இந்தியா சுட்டிக்காட்டியபோது மழுப்பலான பதிலையே அவர் காட்டி அலட்சியம்தான் செய்தார்.
புன்னகைக்கும் டெல்லி
தற்போது நாடாளுமன்றத் தேர்தலில் ராஜபக்சே தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி தோல்வியைத் தழுவி அவரது பிரதமர் கனவு தகர்ந்திருப்பதை டெல்லி புன்னகையோடு ரசிக்கிறது.. அதே நேரத்தில் சிறிசேன- ரணில் விக்கிரமசிங்கே தலைமையிலான புதிய அரசிடம் இருந்து மத்திய அரசு நிறைய எதிர்பார்ப்புகளையும் கொண்டிருக்கிறது.
என்ன எதிர்பார்ப்புகள்
தமிழர் பிரச்சனைக்கு அரசியல் தீர்வு ஒன்றை ஏற்படுத்த வேண்டும் என்பதுதான் முதன்மையானதாக இருக்கிறது. அடுத்தது இலங்கையை சீனா தனது விரிவாதிக்கத்துக்கு பயன்படுத்துவதை அனுமதிக்கக் கூடாது என்பது..அதிபர் தேர்தலின் போதே சிறிசேனவும் ரணிலும் சீனாவின் துறைமுக திட்டத்தை ரத்து செய்வோம் என்று உறுதியளித்திருந்தனர். ஆனாலும் கூட முழுமையாக இது நடைமுறைப்படுத்தப்படாத நிலைமை இருக்கிறது. இந்தியா- இலங்கை இடையேயான நல்லெண்ண வர்த்தக ஒப்பந்தத்தை முழுமையாக செயல்படுத்த வேண்டும் என்பதும் இந்தியாவின் விருப்பமாக இருக்கிறது. இதற்கான முட்டுக்கட்டைகளை சிறிசேன- ரணில் அரசு நீக்க வேண்டியதும் அவசியமானது.
நல்லுறவை வளர்க்கும்..
இது குறித்து நமது ஒன் இந்தியாவுக்கு கருத்து தெரிவித்த மத்திய அரசு அதிகாரிகள், சிறிசேன- ரணில் அரசிடம் நமக்கு
நிறைய எதிர்பார்ப்புகள் இருக்கிறது. புதிய அரசு நல்லுறவை வளர்க்கும் வகையில் செயல்படும் என்ற நம்பிக்கை இருக்கிறது என்கின்றனர்.