மாணவர்கள் தற்கொலையில் தமிழகத்திற்கு 3வது இடம்! என்ன செய்யப்போகிறோம் இளம் தலைமுறையை காக்க?
இந்திய அளவில் கடந்த மூன்று வருடங்களில் 26ஆயிரம் மாணவர்கள் தற்கொலை செய்துக்கொண்டதாகவும், இந்த பட்டியலில் தமிழகம் மூன்றாவது இடத்தில் உள்ளதாகவும் மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
டெல்லி: நாட்டில் மாணவர்களின் தற்கொலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக தெரிவித்துள்ள மத்திய உள்துறை அமைச்சகம், தமிழகம் இந்த பட்டியலில் 3வது இடத்தில இருப்பதாக தெரிவித்துள்ளது.
மக்களவையில் இவ்விவகாரம் தொடர்பாக எழுத்து மூலமாக பதிலளித்துள்ள மத்திய உள்துறை அமைச்சகம், கடந்த 2016ல் 9,474 மாணவர்கள் தற்கொலை செய்துக்கொண்டுள்ளதாகவும், கடந்த 2015ம் ஆண்டு 8068 பேர் தற்கொலை செய்துக்கொண்டதாகவும் தெரிவித்துள்ளது. ஆண்டுக்கு ஆண்டு ஆயிரக்கணக்கில் மாணவர்கள் தற்கொலை பெருகி வருவதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டிலே மகாராஷ்டிராவில் தான் அதிகளவு மாணவர்கள் தற்கொலை நிகழ்வதாகவும், அதற்கு அடுத்த இடத்தில் மேற்குவங்கமும், மூன்றாவது இடத்தில் தமிழகமும் இருப்பதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. மாணவர்களின் தற்கொலைக்கு பிரதான காரணமாக கருதப்படுவது கல்வி தான் என்றும், பள்ளி மற்றும் கல்லூரி தேர்வுகளில் தேர்ச்சி பெறாத மாணவர்களே அதிகளவில் தற்கொலை செய்துக்கொள்வதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
படிப்பில் அதிகளவான மனஉளைச்சல், பிரஷர் மற்றும் ரேகிங் காரணமாகவே அதிகளவு தற்கொலைகள் நிகழ்வதாகவும், இதனை தடுக்க ஐஐடி நிபுணர்கள் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் மத்திய உள்துறை அமைச்சகம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.