புலிக்குட்டிக்கு பாகுபலி என பெயர் சூட்டல்! மக்களின் சிபாரிசை ஏற்று பூங்கா நிர்வாகம் நடவடிக்கை!
புவனேஷ்வரில் புலிக்குட்டிக்கு பாகுபலி என பூங்கா நிர்வாகிகள் பெயரிட்டுள்ளனர்.
புவனேஷ்வர்: ஒடிசாவில் புலிக்குட்டிக்கு பாகுபலி என பூங்கா நிர்வாகிகள் பெயரிட்டுள்ளனர். பொதுமக்களின் சிபாரிசை ஏற்று பூங்கா நிர்வாகம் புலிக்குட்டிக்கு பாகுபலி என பெயரிட்டுள்ளது.
எஸ்எஸ்.ராஜமவுலி இயக்கி, நடிகர் பிரபாஸ் உள்ளிட்ட பலர் நடித்த பாகுபலி 2ஆம் பாகம் படம் இந்தியா முழுவதும் வெற்றிகரமாக ஓடி வருகிறது. ரூ.1000 கோடிக்கு மேலாக வசூலிலும் சாதனை படைத்து வருகிறது.
திரையிட்ட அனைத்து திரையரங்குகளிலும் வெற்றிகரமாக படம் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் இப்போது புலிக்குட்டி ஒன்றுக்கு பாகுபலியின் பெயரை வைத்திருக்கிறார்கள்.
7 புலிக்குட்டிகள்
ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் அருகே உள்ளது நந்தன் கண்ணன் வனவிலங்கு பூங்கா. இங்குள்ள மேகா, விஜயா, சினேகா ஆகிய புலிகள், ஏழு குட்டிகளை சமீபத்தில் ஈன்றன.
பெட்டியில் போடலாம்
இதற்கு என்ன பெயர் வைக்கலாம் என வனவிலங்கு அதிகாரிகள் பார்வையாளர்களிடம் கேட்டிருந்தனர். இதற்காக வனவிலங்கு பூங்காவில் பெட்டி வைத்து அதில் தாங்கள் விரும்பிய பெயர்களை எழுதி போடலாம் என கூறியிருந்தனர்.
பாகுபலி பெயருக்கு சிபாரிசு
நேற்று அந்த பெட்டியை அதிகாரிகள் திறந்து பார்த்தனர். அதில் ஏராளமானோர் பாகுபலி என்ற பெயரை வைக்குமாறு கூறியிருந்தனர். இதையடுத்து ஒரு புலிக்குட்டிக்கு பாகுபலி என பூங்கா நிர்வாகிகள் பெயர் சூட்டினர்.
அமைச்சர் பங்கேற்பு
மற்றப் புலி குட்டிகளுக்கு குந்தன், அடியஷா, சாஹில், விக்கி, சினு, மவுசுமி ஆகிய பெயர்கள் சூட்டப்பட்டன. இதற்கான விழாவில் ஒடிசா மாநில வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் பிஜய்ஸ்ரீ ரவுத்ரி கலந்துகொண்டார்.