பலாத்காரம்: புகார் அளிக்க சென்ற பெண்ணை படுக்கைக்கு அழைத்த போலீஸ்.. கொந்தளிக்கும் மகளிர் அமைப்புகள்!
பலாத்காரம் குறித்து புகார் அளிக்க சென்ற பெண்ணை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் படுக்கைக்கு அழைத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் பலாத்காரம் செய்யப்பட்டது குறித்து புகார் அளிக்க சென்ற பெண்ணை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் படுக்கைக்கு அழைத்துள்ளார். சப் இன்ஸ்பெக்டர் பேசுவதை ரகசியமாக பதிவு செய்து கொடுத்த இளம்பெண்ணின் புகாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தட்டிக்கழித்துள்ளார். இந்த சம்பவங்கள் மகளிர் அமைப்பினரை கொந்தளிக்க செய்துள்ளது.
டெல்லி, உத்தரப்பிரதேசம், ஹரியான உள்ளிட்ட வட மாநிலங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் உத்தரப்பிரதேசத்தில் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் ராம்பூரில் கடந்த பிப்ரவரி மாதம் 12-ம் தேதி இரவு இரண்டு நபர்களால் 37 வயதான ஷில்பா என்ற பெண் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டார். இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் அப்பகுதி போலீசாரிடம் புகார் அளிக்க சென்றார்.
படுக்கைக்கு அழைத்த போலீஸ்
அப்போது அங்கு சப் இன்ஸ்பெக்டராக இருந்த ஜெய்பால் சிங் என்பவர் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக ஷில்பாவை படுக்கைக்கு வருமாறு அழைத்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த ஷில்பா என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்துப்போனார்.
படுக்கைக்கு வந்தால் நடவடிக்கை
இதையடுத்து சில நாட்கள் கழித்து ஷில்பா மீண்டும் புகார் அளிக்க சென்றார். அப்போதும் உதவி ஆய்வாளர் ஜெய்பால் சிங் அவரை படுக்கைக்கு வந்தால் நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார்.
பேச்சு ரகசியமாக பதிவு
இதனை ஷில்பா தனது போனில் ரகசியமாக பதிவு செய்துள்ளார். பின்னர் உதவி ஆய்வாளர் ஜெய்பால் சிங் பேசியதை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் கொடுத்து புகார் அளித்துள்ளார்.
கைவிரித்த கமிஷனர்
ஆனால் உதவி ஆய்வாளரின் குரலும், பதிவு செய்யப்பட்ட குரலும் ஒத்துப்போகவில்லை எனக்கூறி கமிஷனரும் கைவிரித்து விட்டார். இதனால் கொந்தளித்துள்ள மகளிர் அமைப்பினர் உதவி ஆய்வாளர் ஜெய்பால் சிங் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.