இன்னும் 6 நாட்களே.. 5 முக்கிய வழக்குகளில் தீர்ப்பு.. பரபரப்பான கட்டத்தில் தீபக் மிஸ்ரா!
Recommended Video
டெல்லி: உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா வரும் அக்டோபர் 2-ஆம் தேதி ஓய்வு பெறவுள்ளார். இன்னும் உள்ள 6 நாட்களில் அவர் முக்கியமான 5 வழக்குகளுக்கு தீர்ப்பளிக்க உள்ளார்.
உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியாக கடந்த ஆண்டு ஆகஸ்ட் 28-ஆம் தேதி நியமிக்கப்பட்டார் தீபக் மிஸ்ரா. அவரது பதவிக்காலம் வரும் அக்டோபர் 2-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. அவருக்கு தற்போது 65 வயதாகிறது.
இந்நிலையில் பீமா கோரேகான் வழக்கில் கைது செய்யப்பட்ட 5 பேரும் நக்ஸல் அமைப்புடன் தொடர்புடையவரா என்ற கேள்வியுடன் இந்த வழக்கின் தீர்ப்பை கடந்த வாரம் ஒத்தி வைத்தார். வரும் அக்டோபர் 2-ஆம் தேதி அரசு விடுமுறை என்பதால் 1-ஆம் தேதியோ அல்லது அதற்குள்ளாகவோ அவர் 5 முக்கிய வழக்குகளில் தீர்ப்பை வழங்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். அவை ராமர் கோயில், சபரிமலைக்குள் பெண்கள் நுழைவது, ஆதார் வழக்கு, பீமா கோரேகான் வழக்கு, கள்ளக்காதல் உறவு ஆகிய 5 வழக்குகள் ஆகும்.
ராமர் கோயில் வழக்கு
ராமர் கோவில் தொடர்பான வழக்கு முக்கியமானது. மெயின் வழக்கில் தீர்ப்பு அளிக்கப்படப் போவதில்லை. அதேசமயம், இஸ்லாம் மதத்தில், வழிபாடுகளில் மசூதிகள் இன்றியமையாததா என்பது குறித்த அம்சத்தில் முக்கிய தீர்ப்பளிக்கவுள்ளார் மிஸ்ரா. 1994-ஆம் ஆண்டு முஸ்லிம்கள் திறந்தவெளியில் வழிபடலாம் என்ற வாதம் எழுப்பப்பட்டது. ஆனால், மசூதிகள்தான் இஸ்லாமின் முக்கிய வழிபாட்டுத்தலம். அவை இல்லாவிட்டால் இஸ்லாம் மதம் சீரழிந்துவிடும் என்று இஸ்லாம் மதத்தினர் சார்பில் வாதிடப்பட்டது. இந்த அம்சம் குறித்து தீர்ப்பளிக்கவுள்ளார் மிஸ்ரா.
சபரிமலை ஐயப்பன் கோயில்
சபரிமலை ஐயப்பன் கோவிலில் 10 வயது முதல் 51 வயது வரையிலான பெண்கள் நுழைவதற்கு அனுமதி கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது. பெண்களை ஆலயத்துக்கு அனுமதிக்காதது ஆணாதிக்கம் மற்றும் பேரினவாதம் ஊறி போய்யுள்ளது என்று வாதம் முன் வைக்கப்பட்டது. இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட வேண்டும்.
ஆதார் தீர்ப்பு
அரசின் நலத்திட்ட உதவிகளைப் பெறுவதற்கு ஆதார் எண் கட்டாயம் என்கிற மத்திய அரசின் உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. ஆதார் மூலம் தனி நபரின் விவரங்கள் திருடப்படும் அபாயம் உள்ளதாக வாதிடப்பட்டது. ஆதார் என்பதில் தனி நபர் விவரங்களுக்கு எந்த வித அச்சுறுத்தலும் இல்லை. தகவல்கள் பாதுகாப்பானதாக உள்ளது என்பது மத்திய அரசு தரப்பு வாதம் ஆகும். ஆதார் அடையாள எண் அரசியலமைப்புக்கு எதிரானது என அறிவிக்க கோரி தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கோரேகான் வழக்கு
மகாராஷ்டிராவில் நடத்தப்பட்ட அதிரடி சோதனைகளில் மாவோயிஸ்ட் சிந்தனை எழுத்தாளர் வராவர ராவ், பத்திரிகையாளர் குர்மநாத் கிராந்தி, புகைப்படக் கலைஞர் கிராந்தி, வழக்கறிஞர் சுதா பரத்வராஜ் மற்றும் செய்தியாளர் ஒருவர் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மாவோயிஸ சிந்தனை எழுத்தாளர் வரவர ராவ், பத்திரிகையாளர் குர்மநாத் கிராந்தி ஆகியோருக்கு தடைசெய்யப்பட்டுள்ள மாவோயிஸ்ட்களுடன் தொடர்பு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த கைது நடவடிக்கைக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
497- பிரிவு குறித்த வழக்கு
கணவனை ஏமாற்றிவிட்டு தனது கள்ளக்காதலனுடன் உறவு வைத்துக் கொள்ளும் பெண்களை தண்டிப்பது தொடர்பாக இந்திய சட்டத்தில் இடம் இல்லை. இந்த விவகாரத்தில் உறவு கொண்ட ஆணுக்கு மட்டுமே தண்டனை வழங்கப்படுகிறது. பெண்ணுக்கு தண்டனை இல்லை. சட்டப்படி ஆணை தண்டிக்க முடியும். ஆனால் பெண்ணை தண்டிக்க முடியாது. அதுவும் சம்மதத்துடன் உறவு கொண்டால் அது குற்றமே இல்லை என சட்டத்தில் உள்ளது. ஆண், பெண் சமத்துவத்திற்கு எதிரானதாக இருக்கும் 497-ஆவது பிரிவை நீக்குவது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்படவுள்ளது.