ஈரான்- இந்திய நெருக்கம்: கவலையில் செளதி அரேபியா.. அம்பலமாக்கும் விக்கிலீக்ஸ்
டெல்லி: விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ள ஆவணங்களில் இந்தியாவில் ஈரானின் செயல்பாடுகள் அதிகரிப்பதும், அது ஷியா மக்களை கவர முயல்வதும் சவுதி அரேபியாவுக்கு கவலை அளிப்பது தெரிய வந்துள்ளது.
விக்கிலீக்ஸ் கடந்த வாரம் சில ஆவணங்களை வெளியிட்டுள்ளது. சவுதி அரேபியா தொடர்பான அந்த ஆவணங்கள் அரபு மொழியில் உள்ளது. மக்காவில் உள்ள முஸ்லீம் உலக லீக் என்ற இஸ்லாமிய அமைப்பு இந்தியாவில் சலாபி அல்லது வஹாபி மையங்களை துவங்க கோரிக்கை விடுத்துள்ளது. முஸ்லீம் உலக லீக் அமைப்புக்கும் தீவிரவாதிகளுக்கும் தொடர்பு உள்ளது என்ற குற்றச்சாட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவுடனான உறவை மேம்படுத்த சவுதி விரும்புவது அந்த ஆவணங்கள் மூலம் தெரிய வந்துள்ளது. சவுதி வெளியுறவுத் துறை அமைச்சக ஆவணங்களை விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது. ஆங்கிலத்தில் உள்ள ஆவணங்களில் ரியாத்தில் உள்ள இந்திய தூதரகம் மற்றும் சவுதி வெளியுறவுத் துறை இடையிலான வழக்கமான விவகாரங்கள் உள்ளன.
அதே சமயம் அரபு மொழியில் உள்ள ஆவணங்களில் இந்தியாவுடனான ஈரானின் கலாச்சார மற்றும் பொருளாதார உறவு, இந்தியாவில் வசிக்கும் ஷியா முஸ்லீம்களுடான உறவு ஆகியவை பற்றி சவுதி அரேபியா கவலை தெரிவித்துள்ளது.
ஈரான், இந்தியா இடையேயான உறவு பற்றி இரண்டு ஆவணங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு மெமோ டெல்லியில் உள்ள சவுதி தூதரகத்தில் இருந்து 2012ம் ஆண்டு ஜனவரி 23ம் தேதி அனுப்பி வைக்கப்பட்டது. மற்றொன்றை சவுதி வெளியுறவுத் துறை அமைச்சகம் 2011-2012ல் அனுப்பியது.
சவுதி அரசு இந்தியாவில் ஈரான் மற்றும் ஷியா முஸ்லீம்களின் நடவடிக்கையை கண்காணிபப்பது அந்த ஆவணங்கள் மூலம் தெரிய வந்ததுள்ளது.
இந்தியாவில் ஈரானியர்கள் கலாச்சார நிகழ்ச்சிகள் நடத்துவது குறித்தும், கலாச்சார மையங்களை அமைக்க பேச்சுவார்த்தை நடத்துவது குறித்தும் டெல்லியில் உள்ள சவுதி தூதரகம் அனுப்பிய ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரபு நாடுகளைப் போன்று இல்லாமல் இந்தியாவில் ஷியா மற்றும் சன்னி முஸ்லீம்கள் ஒற்றுமையாக உள்ளனர்.
இந்தியா தன்னை சீனாவின் போட்டியாளர் என நினைத்து மேற்கத்திய நாடுகளுடன் ஒட்டி உறவாடுகிறது. ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா வெளியேறிய பிறகு அங்கு பாகிஸ்தானின் ஆதிக்கத்தை தடுத்து நிறுத்த இந்தியாவும், ஈரானும் கூட்டாக பணியாற்றலாம் என ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஈரானுடன் இந்தியா நட்பாக உள்ளது. ஈரான் இந்தியாவுக்கு கச்சா எண்ணெண்ணெய்யை தாராளமாக வழங்கி வருகிறது என்று ஒரு ஆவணத்தில் கூறப்பட்டுள்ளது. இந்தியா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தானில் சலாபி மையங்களை திறக்க முஸ்லீம் உலக லீக் ஆசைப்படுவதும் ஆவணங்கள் மூலம் தெரிய வந்துள்ளது. மேலும் சவுதி இந்தியாவுடனான உறவை மேம்படுத்த விரும்புவதும் தெரிய வந்துள்ளது.