மலப்புரத்தில் கனமழை.. 50 பேருடன் புதையுண்ட 2 கிராமங்கள்.. 12 அடிக்கு சேறும் சகதியை அள்ளும் ஜேசிபி!
மலப்புரம்: மலப்புரத்தில் கனமழை பெய்து வரும் நிலையில் நிலச்சரிவால் இரு கிராமங்கள் புதையுண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தென்மேற்கு பருவமழை தற்போது தீவிரமடைந்து வருகிறது. இதனால் வடமாநிலங்கள், தென்மாநிலங்கள் வெள்ள நீரில் மிதக்கின்றன. கர்நாடகம், கேரளம், மகாராஷ்டிரம், குஜராத், ஒடிஸா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது.
சில இடங்களில் நிலச்சரிவும் ஏற்படுகிறது. இந்த கனமழையால் அணைகள், ஆறுகள் நிரம்பி காணப்படுகின்றன. ஆறுகளில் பெரு வெள்ளப்பெருக்கால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
பாதுகாப்பு படையினர்
இந்த நிலையில் வயநாட்டில் ஆங்காங்கே நிலச்சரிவு ஏற்பட்டு ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர். வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் மீட்பு படையினர் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மலையிலிருந்து சரிந்த மண்
இந்த நிலையில் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள கவலப்பாரா என்ற மலை கிராமம் உள்ளது. இங்கு 10 ஏக்கர் பரப்பளவில் 35 குடும்பத்தினர் வசித்து வந்தனர். கடந்த 8-ஆம் தேதி கனமழை பெய்து வந்ததால் மலையிலிருந்த மண் சரிந்தது. அப்போது மலப்புரத்தில் உள்ள கவலுப்பாரா, வயநாட்டில் உள்ள புதுமலா ஆகிய இரு கிராமங்கள் கடந்த 8-ஆம் தேதி பெய்த பெருமழையில் மண்ணில் புதையுண்டன.
கண்ணீருடன் தேடி
தொடர்ந்து 3 நாட்களாக பெய்து வரும் மழையிலும் மண்ணுக்குள் புதையுண்டவர்களை தேடும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலச்சரிவில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியவர்கள் தங்கள் உறவினர்களை கண்ணீருடன் தேடி வருகின்றனர்.
சோகம்
12 அடிக்கு சேறு உள்ளதால் அவற்றை அகற்றும் பணிகள் ஜேசிபி இயந்திரம் மூலம் நடைபெற்று வருகிறது. இதனால் சுற்றுவட்டார கிராமத்தினர் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.