சிபிஐ, ஐடி அதிகாரிகளை கிறங்கடிக்கும் வீடியோகான் கடன் மோசடி
வங்கிக் கடன் வாங்கி வீடியோகான் நிறுவனம் செய்த மோசடி குறித்து ஐசிஐசிஐ தலைவரின் கணவரிடம் வருமான வரித் துறை விசாரிக்கிறது
டெல்லி: மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போட முடியுமா? முடியும் என்று நிரூபித்துள்ள ஐசிஐசிஐ வங்கி - வீடியோகான் கடன் மோசடி விவகாரம்.
எஸ்பிஐ தலைமையிலான பல்வேறு வங்கிகளிடம், வீடியோகான் நிறுவனம் ரூ.40 ஆயிரம் கோடி ரூபாயை கடனாக வாங்கி திருப்பித் தராமல் ஏமாற்றியுள்ளது. இதில், தனியார் வங்கியான ஐசிஐசிஐ வங்கியிடம் இருந்து மட்டும் வாங்கிய, ரூ.3,250 கோடி கடன் வாராக் கடனாகி உள்ளது.
இந்த வங்கி மோசடி குறித்து, சிபிஐ, வருமான வரித் துறை உள்பட பல்வேறு அமைப்புகள் விசாரணை நடத்தி வருகின்றன.
ஐசிஐசிஐ வங்கியில் இருந்து வீடியோகான் நிறுவனம் கடன் வாங்கிய அதே நேரத்தில் வங்கித் தலைவரின் கணவரின் நிறுவனத்துக்கு பெரிய முதலீடு கிடைத்துள்ளது எப்படி என்பதுதான் தற்போதைய விசாரணையாக உள்ளது.
இந்த வங்கி மோசடியில், ஐசிஐசிஐ வங்கியின் தலைவர் சந்தா கோச்சார் மீது ஏற்கனவே சந்தேகம் திரும்பியுள்ள நிலையில், அவருடைய கணவர் தீபக் கோச்சாரின் நிறுவனங்கள் குறித்தும் அதற்கு மொரீஷியஸ் நாட்டில் இருந்து வந்துள்ள முதலீடுகள் குறித்தும் வருமான வரித் துறை விசாரிக்கிறது.
தீபக் கோச்சார் நடத்தும் நியூபவர் ரினுபவல்ஸ் நிறுவனத்துக்கு, மொரீஷியஸ் நாட்டில் இருந்து இரண்டு நிறுவனங்கள் சில நூறு கோடி ரூபாய் முதலீடு வந்துள்ளது.
இது தொடர்பாக வருமான வரித் துறையுடன் இணைந்து, சிபிஐயும் விசாரிக்கத் துவங்கியுள்ளது. விரைவில் அதிரடி கைது நடவடிக்கை இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.