வீட்டுக் கடன் வாங்கியோருக்கு ரூ. 2 லட்சம் வரை வரி விலக்கு!
டெல்லி: வீட்டுக் கடன் வாங்கியுள்ளவர்களுக்கும் வாங்க உள்ளவர்களுக்கும் நல்ல செய்தியைத் தந்துள்ளார் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி.
வீட்டுக் கடன்களுக்கு திருப்பிச் செலுத்தப்படும் அசல், வட்டி ஆகிய இரண்டுக்கும் தனித்தனியே வரிச் சலுகை அளிக்கப்பட்டு வருகிறது.
அசலுக்கான வரிச் சலுகை 80-சி என்ற பிரிவின் கீழ் தரப்படுகிறது. வட்டிக்கான வரிச் சலுகை தனியே தரப்படுகிறது.
இதுவரை வீட்டுக் கடனுக்கு திருப்பிச் செலுத்தப்படும் வட்டிக்கான வரிச் சலுகைக்கு ரூ. 1.5 லட்சம் தான் உச்ச வரம்பாக இருந்தது. இதை இன்றைய பட்ஜெட்டில் ரூ. 2 லட்சமாக உயர்த்தியுள்ளார் நிதியமைச்சர் அருண் ஜேட்லி.
இதன்மூலம் வீட்டுக் கடன் வாங்கியோருக்கு ஆண்டுக்கு ரூ. 50,000 வரை சேமிப்பாகும்.
உதாரணத்துக்கு நீங்கள் ரூ. 20 லட்சம் வீட்டுக் கடன் வாங்கியிருந்தால், மாதம் சுமார் ரூ. 22,000 திருப்பிச் செலுத்துவீர்கள். இதில் அசல் வெறும் ரூ. 3,000 தான் இருக்கும். வட்டி மட்டுமே ரூ. 19,000 வரை இருக்கும்.
ஆண்டுக்குக் கணக்கிட்டால் வட்டியாக மட்டும் ரூ. 2.28 லட்சம் (ரூ. 19,000*12) செலுத்துவீர்கள். இதில் இதுவரை ரூ. 1.5 லட்சத்துக்கு மட்டுமே வரி விலக்கு கிடைத்திருக்கும். மிச்சமுள்ள ரூ. 78,000க்கு வரி செலுத்தி வந்திருப்பீர்கள்.
இனிமேல் ரூ. 2 லட்சத்துக்கு வரி விலக்கு கிடைக்கும். இதனால் ரூ. 28,000 மட்டுமே வரி செலுத்த வேண்டி வரும்.
இது வீட்டுக் கடன் வாங்கியோருக்கு பெரும் உதவியாக இருக்கும்.