அன்னதானம், ஆக்சிஜன் பார்லர்... சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு கூடுதல் வசதிகள் செய்ய கோர்ட் உத்தரவு
திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு வரும் பெண்கள், சிறியவர்கள், மாற்று திறனாளிகள் சுவாமி தரிசனம் செய்ய சிறப்பு வசதி ஏற்பாடு செய்ய வேண்டும் என கேரள அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல, மகர விளக்கு காலங்களில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவர். இந்த சீசன் காலத்தில் பல மணி நேரம் பக்தர்கள் காத்திருந்து தரிசனம் செய்தது உள்ளிட்ட பல்வேறு புகார்கள் எழுந்தன.
இது தொடர்பாக கேரள உயர் நீதிமன்ற நீதிபதிகள் ராமசந்திரன் நாயர் மற்றும் ஆபிரகாம் மேத்யூ ஆகியோர் அடங்கிய டிவிசன் பெஞ்ச் ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது.
சிரமம் தொடர்பாக புகார்...
அதன்படி மகர, மண்டல பூஜை காலங்களிலும், மாத பூஜை காலங்களிலும் வரும் வயதான பெண்கள், சிறுவர்கள், மாற்று திறானிகள் சாமி தரிசனம் செய்ய பெரும் சிரமம் ஏற்படுவதாக புகார் எழுந்துள்ளது.
எளிதில் தரிசனம்....
இது தொடர்பாக கேரள அரசும், திருவாங்கூர் தேவசம போர்டும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவர்கள் எளிதில் தரிசனம் செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விரைவில் நடவடிக்கை...
அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படக் கூடாது. அடுத்த சீசனுக்குள் இதற்கான நடவடிக்கையை தீவிரபபடுத்த வேண்டும்.
ஆக்சிஜன் பார்லர்...
சுவாமி ஐயப்பன் ரோட்டில் இருந்து பம்பை மற்றும் சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு குடிநீர், கழிப்பறை, ஓய்வு மையம். ஆக்சிஜன் பார்லர் மற்றும் மருத்துவ வசதியை ஏற்படுத்த வேண்டும்.
அன்னதான மையங்கள்...
பம்பையிலும்,சன்னிதானத்திலும் கூடுதலாக அன்னதான மையங்களும் ஏற்படுத்த வேண்டும். வியாபார நோக்கில் வாணிக நிறுவனங்களுக்கு ஏலம் விடுவதை தவிர்த்து அரசு மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும்.
உணவு மற்றும் குடிநீர் வசதி...
விஜிலென்ஸ் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். நீண்ட நேரம் வரிசையில் நிற்பவர்களுக்கு குடிநீர் மற்றும் உணவு கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பிளாஸ்டிக் பொருட்களுக்குத் தடை...
சன்னிதானத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை தவிர்க்க வேண்டும். நிலக்கல்லில் வாகனங்கள் நிறுத்த கூடுதல் வசதி தேவை' என இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.